அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி டியோல், அனில் கபூர், த்ரிப்தி டிம்ரி ஆகியோர் நடிப்பில் தயாரான திரைப்படம் ‘அனிமல்’. இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 1 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
வெளியான நாளில் இருந்தே இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. முதல் நாளிலேயே ரூ.116 கோடி வசூலை பெற்ற இந்த திரைப்படம், முதல் 3 நாட்களில் ரூ.356 கோடி ரூபாய் வசூலை கடந்த, உலக அளவில் வசூல் ரீதியாக அந்த வாரத்தின் No.1 திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது.
இந்நிலையில், இப்படம் வெளியான 6 நாட்களிலேயே ரூ.500 கோடி வசூலை கடந்துள்ளது.
இது குறித்து ‘அனிமல்’ படத்தின் படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இப்படம் 6 நாட்களில் ரூ.527.6 கோடி வசூலை கடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இப்படி, இந்த ‘அனிமல்’ படத்திற்கு ஒரு பிரிவினரிடையே நல்ல வரவேற்பு இருந்தாலும், மற்றொரு பிரிவினர் இப்படத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்சன் காட்சிகள் தொடர்ந்து மிகுந்த எதிர்ப்புகளை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தற்போது நாடாளுமன்றத்தை எட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ரஞ்சித் ரஞ்சன், அனிமல் படம் குறித்தும், அதனால் சமூகத்தில் ஏற்படப்போகும் எதிர்மறை தாக்கங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதம் எழுப்பியுள்ளார்.
வன்முறைகள், அவமானம், அக்கிரமங்கள் ஆகியவற்றை நியாயப்படுத்தும் விதத்தில் இப்படம் அமைந்துள்ளதாக அவர் கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், இது போன்ற படங்கள் சமூகத்தில் வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க வழிவகுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இப்படியான படங்களுக்கு திரைப்பட தணிக்கைக் குழு எப்படி அனுமதி அளித்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இறுதியாக, “இதுபோன்ற படங்கள் சமூகத்திற்கு ஒரு நோய்”, என்ற ஒரு அதிரடி கருத்தையும் ரஞ்சித் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
சென்னை – கும்மிடிப்பூண்டி – சூலூர்பேட்டை ரயில்கள்: வழக்கம் போல இயங்கும்!
