ஏஞ்சல் படத்தை நடித்துக் கொடுக்காமல் மாமன்னன் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி தயாரிப்பாளர் ராமசரவணன் இன்று (ஜூன் 19) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஏஞ்சல் என்ற திரைப்படத்தை தயாரிப்பாளர் ராம சரவணன் தயாரித்தார். ஆனால் 5 வருடங்கள் மேலாகியும் சில காரணங்களால் இன்னும் முடியாமல் இருக்கிறது.
இதனையடுத்து உதயநிதி 8 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் மட்டும் போதும் படம் முடிந்து விடும் என்றும், உண்மையான ஹீரோவாக படக்குழுவை அவர் காப்பாற்ற வேண்டும் என்றும் கோரி கடந்த மார்ச் மாதம் ராம சரவணன் நீண்ட அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால் அதற்கு இதுவரை உதயநிதியின் தரப்பில் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

மேலும் திமுக அரசுக்கு எதிராகவும், உதய நிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு எதிராகவும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் சவுக்கு சங்கர் கூட அப்போது உதயநிதிக்கு ஆதரவாக பேசினார்.
அவர், ஏஞ்சல் பட விவகாரத்தில் உதயநிதி மேல் எந்த தவறும் கிடையாது என்றும், தயாரிப்பாளர் ராமசரவணன் பணத்திற்காக தான் இப்படி ஒரு பிரச்சனையை கிளப்புவதாகவும் கூறியது பரபரப்பாக பேசப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படம் வரும் 29ஆம் தேதி திரைக்கு வர தயாராக உள்ளது.
இந்நிலையில் ஏஞ்சல் படத்தை நடித்துக் கொடுக்காமல் மாமன்னன் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ராமசரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், ”ஏஞ்சல் படம் முடியும் தருவாயில் உள்ளது. எனவே இதற்கு 25 நாட்கள் கால் சீட் கொடுத்துவிட்டு மாமன்னன் படத்தை திரையிடலாம். அப்படி முடியாவிட்டால் 25 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். இதனை கொடுக்க தவறினால் மாமன்னன் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்” என்று தயாரிப்பாளர் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதனால் இன்னும் 10 நாட்களில் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே வெளியாக உள்ள மாமன்னன் திரைப்படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா

Comments are closed.