ஆவடி காவல் ஆணையரின் கார் இன்று (ஏப்ரல் 7) விபத்துக்குள்ளானது. Andhra Pradesh lorry hits Police Commissioner car
ஆவடி மாநகர் காவல் ஆணையராக சங்கர் ஐபிஎஸ் உள்ளார். இன்று காலை சுமார் 11 மணியளவில் சோழவரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜி.என்.டி.சாலையில் செம்பிலி சோழவரம் சந்திப்பில் நின்றிருந்த இவரது கார் விபத்தில் சிக்கியது.
வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஆண்டார்குப்பம் அருகே அரசு விழா நடைபெறவுள்ளது. இந்த இடத்தை பார்வையிடுவதற்காக TN06 BG0003 என்ற காரில் சென்றுவிட்டு திரும்பி வரும்போது செம்பிலி சோழவரம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் காரணத்தால் நின்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்முனையில் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த KA01 AP 9699 என்ற டிரைலர் லாரி முன்னாள் வந்த மினி மகேந்திரா வேன் மீது மோதியது. இந்த மகேந்திரா வாகனம் நின்று கொண்டிருந்த காவல் ஆணையர் சங்கர் காரில் மேகமாக மோதியது.

இதில் ஆணையரின் கார் இரு பக்கமும் சேதமடைந்தது. இவ்விபத்தால் ஆணையர் சங்கரின் இடது கையில் காயம் ஏற்பட்டது. இடதுபக்கம் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஆணையர் சங்கரின் பாதுகாவலர் மாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்விபத்து குறித்து ஆர்டிஓ வட்டாரத்தில் விசாரித்த போது,
‘ஆந்திரா லாரியில் ஏற்பட்ட பிரேக் பெயிலியர்தான் விபத்துக்கு காரணம். தமிழ்நாட்டை போல மற்ற மாநிலங்களில் எப்சி பார்ப்பதில்லை. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள ஆர்டிஓ மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வாகனத்தை நேரடியாக சென்று பார்ப்பது கிடையாது. இதனால்தான் இதுபோன்று விபத்துகள் ஏற்படுகின்றன” என்று கூறினர். Andhra Pradesh lorry hits Police Commissioner car