சட்டமன்ற தேர்தலுக்கு பின் அன்புமணி ஜீரோ ஆவார் என எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே சேலம் 5 ரோட்டில் உள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் இன்று (டிசம்பர் 29) மருத்துவர் ராமதாஸ் தலைமையில் செயற்குழு பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இதில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், செயல் தலைவர் ஸ்ரீ காந்தி கௌரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பொதுச் செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் மன்சூர், மாநில இளைஞர் சங்கத் தலைவர் தமிழ்குமரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 650 பேர் பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 4,300 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்க மருத்துவர் ராமதாசுக்கு அங்கீகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கூட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் அருள் தேர்தலுக்குப் பின் அன்புமணி ஜீரோ ஆவார் என தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பேசிய அருள் எம்எல்ஏ, “அன்புமணிக்கு பல்வேறு பதவிகள் கொடுத்து அழகு பார்த்தவர் ராமதாஸ். ராமதாசுக்கும் அன்புமணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும்போது 10 சதவிகிதத்தில் ராமதாஸ் மீண்டும் ஆரம்பிக்கிறார். அன்புமணி 90 சதவிகிதத்தில் ஆரம்பிக்கிறார் என்று அரசியல் வல்லுனர் ஒருவர் சொன்னார். எல்லோரையும் மிரட்டி பணத்தை கொடுத்து அழைத்து போய் அவர் 90 சதவிகிதத்தில் ஆரம்பித்தார். ஆனால் மருத்துவர் ராமதாஸ் கிராப் என்பது நாளுக்கு நாள், நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கிறது. இன்றைக்கு ராமதாஸ் 90 என்ற இடத்தில் இருக்கிறார். 90 இல் தொடங்கிய அன்புமணி 10 என்ற நிலைக்கு வந்துவிட்டார்.
இந்த தேர்தலுக்குப் பிறகு அவர் ஜீரோ ஆவார். ஏனென்றால் அந்த ஒன்று என்ற நபர் தான் மருத்துவர் ராமதாஸ். எனவே இந்த ஒன்று இருந்தால்தான் அந்த பூஜ்ஜியத்திற்கு மரியாதை நீங்கள் தூக்கி எறிந்து விட்டீர்கள். அதனால் அவர் ஜீரோ ஆகிவிடுவார் என்று தெரிவித்துள்ளார்.
