மின்வெட்டுப் பிரச்சினைக்கு முந்தைய திமுக அரசுதான் காரணம். தற்போதைய அரசு நன்றாகப் பணியாற்றி வருகிறது. நிறைய மாற்றங்கள் வந்துள்ளன என பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூன் 9) காலை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்தும், மேகதாது அணை விவகாரம் குறித்தும் முதல்வரிடம் அவர் கோரிக்கை மனுக்களை அளித்தார்.
முதல்வர் விஜய்யுடனான சந்திப்பிற்குப் பிறகு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் , “”தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஜூன் 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிகழ்த்தப்படவிருக்கும் ஆளுநர் உரையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு அதற்கான அரசாணையையும் உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும், இது தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவுகளையும் அவரிடம் சமர்ப்பித்துள்ளோம்.
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்று நாளையுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. தற்போதைய அரசு நன்றாகப் பணியாற்றி வருகிறது. நிறைய மாற்றங்கள் வந்துள்ளன; ஊழல் பெரிய அளவில் குறைந்துள்ளது. எனினும், இந்த அரசுக்கு நாம் இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுக்க வேண்டும். அரசுதான் மாறியுள்ளது, அதிகாரிகளின் மனநிலை இன்னும் மாறவில்லை. அதிகாரிகள் மாறுவதற்கு இன்னும் சில காலம் எடுக்கும். ஒரே மாதத்தில் எல்லாவற்றையும் செய்துவிட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.
தற்போது நிலவும் மின்வெட்டுப் பிரச்சினைக்கு முந்தைய திமுக அரசுதான் காரணம். கடந்த ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில் ஒரு புதிய மின் திட்டம் கூட கொண்டு வரப்படவில்லை. கிட்டத்தட்ட 14,000 மெகாவாட் மின் திட்டங்கள் தற்போது நிலுவையில் உள்ளன. கடந்த 12 ஆண்டுகளாகவே புதிய மின் திட்டங்கள் எதுவும் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அதே போல் மேகதாது பிரச்சினை என்பது தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சினை. இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
