துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டம் கொண்டு வருவதில் மட்டுமல்ல.. அதை தொடர்ந்து கண்காணித்து அதற்கு நல்ல ரிசல்ட் அவர் கொடுத்துள்ளார் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்கள் சந்தித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். முதலில் உதயநிதி என்ன பணி செய்தார்? என அவர்கள் கூற வேண்டும் உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் நாலேஜ் கிடையாது. இது நம்முடைய சாபக்கேடு என்று காட்டமாக பேசினார்.
இந்நிலையில் இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் அண்ணாமலையின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அன்பில் மகேஷ், ” இளைய சமுதாயம் சார்ந்து பல்வேறு விதத்தில் ஸ்கில் டெவலப்மெண்ட் (Skill Development) சார்ந்து துணை முதலமைச்சர் எடுக்கும் முன்னெடுப்புகளை பாருங்கள், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என இன்று பலர் சேர்ந்துள்ளனர் என்றால் அதற்கு அடுத்த கட்டமாக வேலைவாய்ப்பில் கொண்டு போய் அவர்களை அமர வைப்பதற்கு ஸ்கில் டெவலப்மெண்ட் தேவை. நான் முதல்வன் திட்டம் சார்ந்தெல்லாம் அண்ணாமலை தெரிந்து கொள்ள வேண்டும். திட்டம் கொண்டு வருவதில் மட்டுமல்ல.. அதை தொடர்ந்து கண்காணித்து அதற்கு நல்ல ரிசல்ட் அவர் கொடுத்துள்ளார்.
அதேபோல் பள்ளி கல்வித்துறை அமைச்சராக நானும் கற்றுக்கொண்டு தான் உள்ளேன். நிறைய சாதிக்க வேண்டும் என ஆசைப்படுகின்ற ஒரு இளைய சமுதாயத்தை இது போல் இன்னொரு இளைஞர் சொல்வது வருத்தமளிக்கிறது என்றார்.
டெட் தேர்வு குறித்து பேசுகையில், ஆசிரியர் சங்கத்தை சார்ந்தவர்களிடம் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தினோம். பலர் பல்வேறு விதமான கருத்துக்களை கூறியுள்ளனர். கூட்டத்திற்கு பின் அவர்களின் கருத்துக்களை முதல்வரிடம் எடுத்து வைத்தோம். ஒரு பக்கம் சட்ட போராட்டம் மறுபக்கம் நம்முடைய ஆசிரியர்கள் ஒருவரை கூட விட்டு விடாமல் அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் என்ன பணி செய்ய முடியுமோ அதை செய்வோம்.” என்று தெரிவித்துள்ளார்.
