தவெக தலைவர் விஜய் திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை என்றுதான் தெரிகிறது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எந்த வளர்ச்சியும் இல்லை என தவெக தலைவர் விஜய் திருச்சியில் நேற்று (செப்டம்பர் 13) நடந்த பிரச்சாரத்தின் போது குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார் .’விஜய்யின் குற்றச்சாட்டை மறுத்த அன்பில் மகேஷ், விஜய் அவர்கள் கேட்கலையா.. கேட்கலையா.. என்று பேசியதை இன்று செய்தித்தாளில் பார்த்தேன். கேட்கலை.. கேட்கலை.. என்று சொல்வதை விட திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை என்றுதான் தெரிகிறது.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேருவின் துறையை எடுத்துக் கொண்டால், கிட்டத்தட்ட ரூ.128 கோடி மதிப்பில் 38 ஏக்கரில் பேரறிஞர் அண்ணா பெயரில் கனரக வாகனம் சரக்கு முனையம் அமைக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் பெயரில் ரூபாய் ரூ.236 கோடி மதிப்பில் 22 ஏக்கரில் காய்கறி அங்காடி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கலைஞர் பெயரில் ரூபாய் ரூ.408 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்பூர் அருகே ரூ.400 கோடி மதிப்பில் டைட்டல் பார்க் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மணப்பாறையில் 110 ஏக்கரில் சிப்காட் தொழில் நிறுவனம் கொண்டு வர பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.7 கோடி மதிப்பில் வாரச்சந்தையும், மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் கொண்டுவரப்பட்டுள்ளது. திருவெறும்பூரில் ரூ.56 கோடி மதிப்பில் அரசு மாதிரி பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன.
மேலும் ரூபாய் ரூ.150 கோடி மதிப்பில் சர்வதேச ஒலிம்பிக் அகாடமி தொடங்க முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மூன்று கோடி மதிப்பில் ஜல்லிக்கட்டு அரங்கமும், திருச்சி கிழக்கு தொகுதியில் காமராஜர் பெயரில் 290 கோடி மதிப்பில் பெரிய நூலகம் அறிவுசார் மையமும் தொடங்கப்பட்டுள்ளது. ரூ.18 கோடி அளவிலான பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது” என விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.
