போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மாணவர்களின் நலன் கருதி பணிக்கு திரும்ப வேண்டும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.
“சம வேலைக்கு சம ஊதியம்” மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் இன்று (ஜனவரி 31) 35ஆவது நாளை எட்டியிருக்கிறது. இந்தசூழலில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஜனவரி மாத ஊதியம் 80 சதவிகிதம் வரை பிடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
இன்று (ஜனவரி 31) அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு முதல்வர் மீது நம்பிக்கை வைத்து ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பாக மூவர் குழு விரைவில் அறிக்கை வெளியிடும். அதன்படி, இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் 5,781 ஆசிரியர்கள்உடனே பணிக்கு திரும்ப வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
