ADVERTISEMENT

சென்னைக்கு நிகராக திருச்சியை மாற்றுவேன்: மேயர் அன்பழகன்

Published On:

| By admin

திருச்சி மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த அன்பழகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வார்டுகளில் திமுக கூட்டணி 59 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றியை பெற்றது. இதையடுத்து 27வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்பழகன் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

இதையடுத்து இன்று(மார்ச் 4) திருச்சி மாநகராட்சி மன்ற அரங்கில் நடைபெற்ற மறைமுகத் தேர்தலில், இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், திருச்சி மாநகராட்சி மேயராக மு.அன்பழகன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் அறிவித்தார்.


இதையடுத்து, அன்பழகன் மேயருக்கான கருப்பு அங்கியை அணிந்து, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரது பெயரைக் குறிப்பிட்டு, பதவிப் பிரமாண உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

ADVERTISEMENT

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் மேயரான அன்பழகனுக்கு வாழ்த்து தெரிவித்து மேயர் இருக்கையில் அமர செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, மாநகராட்சி கமிஷனர் முஜிபுர் ரகுமான், நகர பொருளாளர் அமுதவல்லி மற்றும் அதிகாரிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள் தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர். இதில், அதிமுக பங்கேற்காமல் புறக்கணித்த நிலையில், 47வது வார்டு அமமுக மாமன்ற உறுப்பினர் பங்கேற்றார்.

ADVERTISEMENT

திருச்சி மேயராக பொறுப்பேற்ற பின் பேட்டியளித்த அன்பழகன், “மேயர் என்கிற பதவியை பொறுப்பு என உணர்ந்து திருச்சி மாநகராட்சியை சென்னைக்கு நிகராக தரம் உயர்த்தும் அளவிற்கு செயல்படுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share