ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமண நிகழ்ச்சிகள் ஜூலை 12 முதல் 14ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் 2023 ஜனவரி 19ஆம் தேதி இந்து முறைப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லமான அன்டில்லாவில் குஜராத் மாநில முறைப்படி நடைபெற்றது.
ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்செண்டுக்கும் ஜூலை மாதம் 12-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணங்களை வெகு விமர்சையாக நடத்தி முடித்தார். தற்போது இளைய மகனான ஆனந்த் அம்பானி திருமணத்தையும் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து வருகிறார்.
அதற்கான முன் திருமண வைபவங்கள் குஜராத் மாநிலம் ஜாம் நகரில், மார்ச் 1 முதல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த முன் திருமண வைபவத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், ரஜினி காந்த், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோன், ஆலியா பட், ஜான்வி கபூர், கேத்ரினா கைஃப், இயக்குநர் அட்லி உட்பட இந்திய திரையுலகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பிராவோ, ரஷித் கான் உட்பட ஏராளமான விளையாட்டு பிரபலங்களும் விழாவில் பங்கேற்றனர். இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்தும் 1,000-த்திற்கும் மேற்பட்ட சிறப்புவிருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, மே 29 முதல் தெற்கு பிரான்ஸ் கடற்கரையோரத்தில் சொகுசு கப்பலில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் 2-வது முன் திருமண வைபவம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் ஷாருக்கான், அமீர்கான், சல்மான் கான், அக்ஷய் குமார், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஆலியா பட், எம்.எஸ்.தோனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
தொடர்ந்து, ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்செண்டுக்கும் ஜூலை மாதம் 12-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறவுள்ளது. இவர்களின் திருமணம், பாந்த்ரா-குர்லா வளாகத்தில் (பிகேசி) உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் பாரம்பரிய இந்து முறையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருமண விழா ஜூலை 12 முதல் ஜூலை 14 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. அதன்படி, ஜூலை 12 அன்று திருமண விழாவும், தொடர்ந்து ஜூலை 13 அன்று சுப ஆசீர்வாத நிகழ்ச்சியும், ஜூலை 14ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…