ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் நேர்மையான விசாரணை நடத்தப்படும் என காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (மே 4) தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த மூன்று நாட்களாக காணவில்லை, மேலும் அவரது போனும் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அதற்கு இவர்கள் தான் காரணம் என்றும் பட்டியலிட்டு நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கு ஜெயக்குமார் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் மாயமான ஜெயக்குமார் தனசிங் உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது தென் மாவட்டம் முழுதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அவர் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என நெல்லை எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமாரின் மரணத்தைத் தொடர்ந்து நெல்லை விரைந்துள்ளார் காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயக்குமார் தனசிங் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் இது எப்படி நடந்தது என்பது தெளிவாக அனைவருக்கும் தெரியவரும்.
ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு எல்லாம் காவல்துறையின் நேர்மையான விசாரணை மூலம் உண்மை வெளிக்கொண்டு வரப்படும். ஜெயக்குமார் மரணத்தில் யார் தவறு செய்திருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும். காங்கிரஸ் கட்சி ரீதியாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது கட்சிக்காக உழைத்த ஒருவரின் இறப்பு. இந்த இறப்பில் எந்தவொரு சமாதானம் செய்துகொள்ளப்பட மாட்டாது. எங்கள் குடும்பத்தில் ஒரு இழப்பு இதனை அவ்வளவு எளிதாக விட்டுவிடமாட்டோம்.
ஜெயக்குமார் தனசிங் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூற அண்ணாமலைக்கு என்ன இருக்கிறது. எங்கள் குடும்பத்தில் ஒரு இழப்பு, பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை எப்படி விசாரிக்க வேண்டும்? உண்மையை கண்டுபிடிப்பது எப்படி? என்று எங்களுக்கு தெரியும் அதில் அண்ணாமலை தலையிட வேண்டியது இல்லை.
மனமிருந்தால் இரங்கல் தெரிவித்திருக்கலாம். ஒரு இழப்பை இப்படி கொச்சைப்படுத்தக்கூடாது. அநாகரீகமான கட்சிக்காரர்கள் என்றால் அது பாஜகவினர் தான்.
எனக்கு இன்று காலை 7.30 மணிக்குமேல் தான் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் காணாமல் போனதாக தகவல் வந்தது. உடனே நான் அவரது சொந்த அண்ணனிடம் விசாரித்தேன். அவர்தான் கடந்த 2 நாட்களாக அவரை காணவில்லை. கடிதம் ஒன்றை எழுதி வைத்திருக்கிறார் என தெரிவித்தார்.
உடனே அங்கு காவல்துறையினர் சென்றனர். எனக்கு அந்த கடிதத்தினை அனுப்புமாறு கூறினேன். அதன்படி எனக்கு கடிதம் புகைப்படம் மூலம் அனுப்பப்பட்டது. கடிதத்தை படித்த பின்னர் உயர் காவல்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசினேன்.
அவர்கள் 12 மணிக்குள் ஜெயக்குமார் தனசிங்கை கண்டுபிடித்து விடுவோம். கடைசியாக எந்த இடத்தில் அவரது கைப்பேசி சிக்னல் இருந்தது, எங்கு அது ஆஃப் செய்யப்பட்டது என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.
பிறகு, நான் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர் சந்திப்பிற்கு வந்தபோது ஒரு உயர் அதிகாரி என்னை தொடர்பு கொண்டு, ஜெயக்குமார் தனசிங் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார்.
ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் தெளிவான விசாரணை, நேர்மையான விசாரணை நடத்தப்படும்” என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…