திருப்பரங்குன்றத்தில் ஜாதி, மதம், கடவுளின் பெயரால் தமிழக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சி எப்போதும் எடுபடாது என அமமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமமுக பொதுக்குழு இன்று நடைபெற்றது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு இன்று (ஜனவரி 5) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 4500 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மீண்டும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க டி.டி.வி. தினகரனுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில், திருப்பரங்குன்றத்தில் ஒருவருக்கொருவர் உறவினர்களாகவும், சகோதரர்களாகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் மதத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலோ, கடவுளின் பெயராலோ பிரிவினை ஏற்படுத்தும் அரசியல் எக்காலத்திலும் எடுபடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; 100 நாள் வேலைத் திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
