கோடையைக் குளுமையாக்கும் இந்த நெல்லிக்காய் சர்பத்தில் அதிகளவில் உள்ள வைட்டமின் சி எலும்புக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள பாஸ்பரஸ், இரும்புச் சத்துகள் இதயத்துக்கு இதமளித்து, ரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. உடலில் பிராண வாயுவை அதிகரித்துச் செல்களுக்கும் மூளைக்கும் புத்துணர்வு அளிப்பதால், இதயம் சீராகச் செயல்பட உறுதுணை புரிகிறது.
என்ன தேவை?
- பெரிய நெல்லிக்காய் – 2
- தோல் சீவிய இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
- எலுமிச்சை (விரும்பினால்) – பாதி அளவு (சாறு பிழியவும்)
- தேன் – ஒரு டேபிள்ஸ்பூன்
- புதினா இலைகள் – ஒரு கைப்பிடி அளவு
- இந்துப்பு – ஒரு சிட்டிகை
- ஊறவைத்த சப்ஜா விதை – கால் டீஸ்பூன்
- தண்ணீர் – 250 மில்லி
எப்படிச் செய்வது?
நெல்லிக்காய்களின் கொட்டைகளை நீக்கவும். அதனுடன் இஞ்சி, இந்துப்பு, புதினா, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுத்து வடிகட்டவும். தேன், சப்ஜா விதைகள் சேர்த்துக் கலந்து பருகலாம். விரும்பினால் எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம்.