2026 சட்டமன்ற தேர்தல்களில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் பிரம்மாண்ட வெற்றியைப் பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று டிசம்பர் 7-ந் தேதி ரூ.1,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைத்து அமித்ஷா பேசியதாவது: பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றன.
இதேபோல 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பெறும்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்ஜி தேர்தல் தோல்வியை எதிர்கொள்ள தயாராக இருங்கள்.. 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது மேற்கு வங்கத்திலும், தமிழ்நாட்டிலும் திரிணாமுல் காங்கிரஸும் திமுகவும் வீழ்த்தப்படுவது உறுதி.
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மோடி 3-வது முறையாக பிரதமராகி உள்ளார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய சாதனை படைத்துள்ளார் மோடி.
மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லியில் துடைத்து எறியப்பட்ட காங்கிரஸ் கட்சி அண்மையில் பீகார் தேர்தலிலும் காணாமல் ஆக்கப்பட்டுவிட்டது. இனிவரும் தேர்தல்களிலும் காங்கிரஸ் நிலைமை இதுதான். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
