இந்தியாவில் ஆங்கில மொழியில் பேசுகிறவர்கள் வெட்கப்படும் சூழ்நிலை விரைவில் உருவாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். இதற்கு தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், அமித்ஷாவை கடுமையாக விமர்சித்துள்ளார். Amit Shah Speaks Against English – Minister Mano Thangaraj Slams His Remarks!
டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அமித்ஷா, நான் சொல்வதை மிகக் கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். இந்தியாவில் ஆங்கிலத்தில் பேசுவதற்காக வெட்கப்படும் சூழ்நிலை உருவாகும் நாள் வெகுதொலைவில் இல்லை. மொழி என்பது நமது கலாசாரத்தின் அணிகலன். அவை இல்லாமல் நாம் இந்தியர்கள் இல்லை. அன்னிய மொழியான ஆங்கில இல்லாமல் இந்தியாவை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. நமது மொழிகளே உன்னதமானவை. நமக்கு எதற்கு அன்னிய மொழியான ஆங்கிலம்? என்றார்.
அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தமது எக்ஸ் பக்கத்தில், ஆங்கிலம் கற்று வெளிநாடுகளில் குடியேறி அதிகாரம் செய்பவர்களுக்கும் இது பொருந்துமா? இல்லை, எப்படியாவது படித்து முன்னேற வேண்டும் என முயற்சிக்கும் ஏழைகளை குறிவைத்தா?
பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்திலேயே அதிகாரத்தை கைப்பற்ற ஆங்கிலம் கற்று ஆங்கிலேயருக்கு கைக்கூலிகளாக செயல்பட்டு சமூகத்தில் பின்தங்கிய மக்களை ஒடுக்கி அவர்கள் உழைப்பை சுரண்டி வாழ்ந்த கூட்டம், இப்போது உழைக்கும் மக்களும் ஆங்கிலம் கற்று உயர்வது கண்டு பொறுக்க முடியாமல் பேசுவதை எண்ணி வேதனை படத்தான் முடிகிறது.
இனத்தை காக்க தாய்மொழி கற்போம். பொருளாதாரம் மேம்பட்டு அதிகாரத்தை கைப்பற்ற ஆங்கிலம் கற்போம். நம்மை ஏமாற்றும் கூட்டத்திடம் விழிப்பாயிருப்போம் என பதிலடி தந்துள்ளார்.
சிபிஎம் எம்.பி. சு. வெங்கடேசன் தமது எக்ஸ் பக்கத்தில், ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு அவ்விடத்தில் இந்தியை உட்கார வைக்க கடந்த 75 ஆண்டுகளாக இந்தி வெறியர்கள் எத்தனையோ வசனங்களைப் பேசிப்பார்த்துவிட்டனர். அதில் அரதப் பழசான வசனம்தான் இன்று அமித்ஷா பேசியுள்ளது. புதுசா ஏதாவது யோசிங்க சார்! என சாடியுள்ளார்.
