தலைமைப் பொறுப்பிற்குத் தகுதியானவரா? எடப்பாடியை விமர்சித்த அமர் பிரசாத் ரெட்டி

Published On:

| By Monisha

Amar Prasad Reddy criticizes Edappadi palanisami

பாஜகவில் இருந்து நிர்வாகிகள் விலகி வரும் நிலையில் தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் நேற்று (மார்ச் 5) கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்தார். அதுமட்டுமின்றி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

இந்நிலையில் இன்று (மார்ச் 6) பாஜக ஐடி விங் செயலாளர் திலீப் கண்ணன் பாஜகவில் இருந்து விலகினார்.

அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகுவதால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநில பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவரும் அண்ணாமலையின் நண்பருமான அமர் பிரசாத் ரெட்டி எடப்பாடி பழனிசாமி தலைமைப் பொறுப்பிற்குத் தகுதியானவரா என்று விமர்சிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளைக் காலில் போட்டு மிதித்து, முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா?
இனி, அந்தச் சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை.

நான்காண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கொள்கையற்ற கட்சி போன்று -பிழைப்புவாதிகளை வைத்து, அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?

கொங்கு மண்டலத்தை தங்கள் கோட்டையாகக் கருதியவர்களை வாக்காளர்கள் வெளியேற்றினர். 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது, அவர்களுக்கு அங்கு மூச்சு விடுவதற்கான அறிகுறி கூட இல்லை என்பதை உணர்த்துகிறது. கோட்டையைப் பிடிப்பதை மறந்து விடுங்கள்.

பாஜக தான் தமிழ்நாட்டின் உண்மையான எதிர்காலம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோனிஷா

கட்சிக்காக உழைத்தவர்களை வேவு பார்ப்பதா?: பாஜக ஐடி விங் செயலாளர் விலகல்!

ஹிட் அடித்த லெஜெண்ட்: தன்னம்பிக்கை சரவணன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share