2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்துவிட்டோம்; தேமுதிகவின் தொண்டர்கள் விரல் காட்டும் கட்சியுடனே கூட்டணி அமைப்போம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடலூரில் இன்று ஜனவரி 9-ந் தேதி நடைபெற்ற மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில்தான் விஜயகாந்த் முதலில் வெற்றி பெற்றார். இந்த கடலூர் மாவட்டம், விஜயகாந்தின் கோட்டை.
தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது; தேமுதிக எங்கு கூட்டணி வைக்கிறதோ அவர்கள்தான் ஆட்சி அமைக்க முடியும்.
தேமுதிகவின் தொண்டர்கள் விரல் நீட்டுகிற கட்சியுடன்தான் கூட்டணி அமைப்போம். மாவட்ட செயலாளர்கள், யாருடன் கூட்டணி என தெரிவித்த சீட்டு என்னிடம்தான் உள்ளது. அதை எல்லாமே பார்த்துவிட்டேன். தேமுதிக நிர்வாகிகளுடன் மாவட்ட செயலாலர்களுடன் ஆலோசனை நடத்திதான் கூட்டணி குறித்த முடிவை அறிவிப்போம்.
தேமுதிகவை வெச்சு ஜெயிச்சுப்பீங்க.. தேமுதிகவை பயன்படுத்துவீங்க.. ஆனால் தேமுதிகவுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கமாட்டீங்களா?

இங்கே இருப்பவர்கள் தேமுதிகவின் மாவட்ட செயலாளர்களா? ஒரு அமைச்சராக செயல்படக் கூடியவர்கள்; முன்னாள் எம்.எல்.ஏக்கள். அவ்வளவு திறமையானவர்கள்.
தேமுதிக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டோம். தமிழகத்தில் எந்த கட்சியும் இதுவரை இந்த கூட்டணியில் இருக்கிறோம் என சொல்லவில்லை.
ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை. மத்திய மாநிலத்தில் இருக்கும் கட்சிகளே கூட்டணி குறித்து அறிவிக்காத போது நாமும் நின்று நிதானமாக அடிப்போம். தேமுதிக தொண்டர்களை மதிப்பவர்களுடன் மட்டும் கூட்டணி. தெளிவாக சிந்தித்து விரைவில் மகத்தான வெற்றி கூட்டணியை அறிவிப்போம். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
