மீண்டும் ரஜினிக்கு எதிராக களத்தில் அஜித்.. கலக்கத்தில் திரையுலகம்!

Published On:

| By Balaji

தமிழ் சினிமாவில் டாப் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் கொடுக்கும் நடிகர்களென்றால் ரஜினி, விஜய் மற்றும் அஜித். இவர்களின் படங்கள் ரிலீஸாகும் நாளன்று தமிழகமே கோலாகலமாக இருக்கும். படம் நன்றாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அசால்டாக நூறு கோடி கிளப்பில் இணைந்துவிடும். அப்படியான, நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது பொதுவாக தவிர்க்கப்படும்.

வேறு வழி இல்லாத சூழலில் ஒரே நாளில், இரண்டு உச்ச நடிகர்களின் படங்கள் சில நேரங்களில் வெளியாகும். இறுதியாக, ரஜினி நடிப்பில் ‘பேட்ட’ மற்றும் அஜித் நடிப்பில் ‘விஸ்வாசம்’ படங்கள் ஒரே நாளில் வெளியானது. இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய லாபம் ஈட்டியது. இரண்டு படங்களுமே ஹிட் என்றாலும் மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் சம்பவம் இனிமேல் நடந்துவிடக் கூடாது என்பதே தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கத்தினரின் விருப்பமாக இருந்தது.

ADVERTISEMENT

தற்பொழுது, கோலிவுட்டில் மீண்டும் அப்படியான ஒரு சம்பவம் நடந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. படத்தை வருகிற தீபாவளிக்கு வெளியிட இருக்கிறது படக்குழு. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகிவிட்டது.

இந்நிலையில், அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. யுவன் ஷங்கர் ராஜா இசைகோர்ப்பில் படம் உருவாகி வருகிறது. படத்துக்கான படப்பிடிப்பு 95% முடிந்துவிட்டது. வெளிநாட்டு ஷெட்யூல் மட்டுமே மீதமிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் முடிந்ததும் அந்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட இருக்கிறது படக்குழு. இதுவரைக்குமான படத்தின் காட்சிகளுக்கான ஃபைனல் எடிட், டப்பிங் உள்ளிட்ட பணிகளும் முடிந்துவிட்டது. இப்படியான சூழலில் படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், வெளிநாட்டு ஷூட்டிங் திட்டமிட்ட படி செல்ல முடியாத காரணத்தால் பட ரிலீஸூம் தள்ளிப் போகிறது.

ADVERTISEMENT

லேட்டஸ்ட் தகவல்படி, வலிமை படத்தை தீபாவளிக்கு வெளியிட பேச்சுவார்த்தைகள் ஒரு பக்கம் போய்க் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, ரஜினியின் அண்ணாத்த தீபாவளி ரிலீஸ் உறுதி செய்திருந்த நிலையில், மீண்டும் ‘ரஜினி VS அஜித்’ ரிலீஸ் நடந்துவிடும் என்று விநியோகிஸ்தர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். திரையுலகத்தினர் அச்சம் அடைவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

கொரோனாவினால் திரையரங்கில் மக்கள் கூட்டம் பெரிதாக வருவதில்லை. பெரிய ஹீரோக்களின் படங்களும் ஓடிடி பக்கம் சென்று விடுகிறது. விஜய், அஜித், ரஜினி படங்கள் மூலமே ரசிகர்களை மீண்டும் திரையரங்கிற்கு கொண்டுவர முடியும் என நம்புகிறார்கள் திரையரங்கத்தினர்கள். ஒரே நாளில் இரண்டு பெரிய ஹீரோஸ் படங்கள் வெளியானால், இந்த கொரோனா சூழலில் எதாவது ஒரு படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் வருவதே பெரிய சவாலாகிவிடும்.

ADVERTISEMENT

இன்றைய காலக்கட்டத்தில், பெரிய ஹீரோஸ் படங்கள் தனித்தனியாக திரையரங்கில் வெளியானால் மட்டுமே, திரையரங்கத்தினருக்கு லாபமாக அமையும். தயாரிப்பாளருக்கும் பெரிய ஹிட் கொடுக்கும். உதாரணமாக, விஜய் நடித்து மாஸ்டருடன் வெளியான சிம்புவின் ஈஸ்வரன் வந்த இடமும் தெரியவில்லை. போன தடமும் தெரியவில்லை. அப்படியான எந்த சம்பவமும் ரஜினி, அஜித் படங்களுக்கு நடந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள்.

ஆக, ரஜினியின் அண்ணாத்த மற்றும் அஜித் நடிப்பில் வலிமை படங்கள் ஒரே நாளில் வெளியாகுமா? பொறுத்திருந்துப் பார்க்கலாம்

**- ஆதினி **

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share