ADVERTISEMENT

ஏர் இந்தியாவின் புதிய முடிவு!

Published On:

| By admin

டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா, ஓய்வு பெற்ற முன்னாள் விமானிகளை ஐந்தாண்டு காலத்துக்கு மீண்டும் பணியமர்த்த முடிவு செய்துள்ளது. இந்த விமானிகளை மீண்டும் கமாண்டர்களாக பணியமர்த்த ஏர் இந்தியா பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற விமானிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏர்லைன்ஸில் விமானிகள் தான் அதிக சம்பளம் பெறும் ஊழியர்கள்.

மேலும், உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் போதுமான பயிற்சி பெற்ற விமானிகளின் பற்றாக்குறை எப்போதும் ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. ஏர் இந்தியா விமானிகளின் ஓய்வுபெறும் வயது மற்ற எல்லா விமான ஊழியர்களையும் போல 58ஆக உள்ளது. இந்த திட்டத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் விமானிகள் தங்கள் 65 வயது அடையும் வரையில் வேலை செய்யும் வாய்ப்பு வழங்க படுகிறது.

ADVERTISEMENT

இதுகுறித்து ஏர் இந்தியா பணியாளர்களுக்கான துணைப் பொது மேலாளர் விகாஸ் குப்தா கூறுகையில், “58 வயதில் ஓய்வு பெற்ற முன்னாள் விமானிகள், தங்கள் ஓய்வுக்குப் பிந்தைய ஒப்பந்தத்திற்காக 5 ஆண்டுகள் அல்லது 65 வயதை அடையும் வரையில் ஏர் இந்தியாவில் தளபதியாகப் பணிபுரியலாம். இப்படி மறுபடியும் பணியில் சேரும் ஊழியர்களுக்கு ஏர் இந்தியாவின் கொள்கையின்படி, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஊதியம் மற்றும் பறக்கும் சலுகைகள் அனைத்தும் வழங்கப்படும்.” என்று கூறினார்.

மேலும், பணிக்கு திரும்ப ஆர்வமுள்ள ஓய்வுபெற்ற விமானிகள் தங்கள் விவரங்களை எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் ஜூன் 23ஆம் தேதிக்குள் அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுடன் விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி முடிவடைந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் பல தனியார் விமான நிறுவனங்களின் விமானிகள் 65 வயதை எட்டும் வரை பணிபுரிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share