ஏர் இந்தியா நிறுவனம் டாடா நிறுவனத்தால் 1932-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 1953-ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு நாட்டுடைமை ஆக்கியது.
ஏர் இந்தியா, கடும் நஷ்டத்தில் இயங்கியதால் மத்திய அரசு விற்பனை செய்ய முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2021-ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்தை 18 ஆயிரம் கோடிக்கு டாடா நிறுவனத்திடம் ஒப்படைத்தது மத்திய அரசு. Air India flight problems passenger
இந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே ஏர் இந்தியா நிறுவனத்தில் தொடர்ச்சியாக இயந்திர கோளாறு, ஏற்பட்டு வருவது பயணிகளை பாதுகாப்பு தொடர்பான அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தநிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று விபத்துக்குள்ளானதில் 204 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக டாடா தலைவர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள பதிவில், “விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கோர விபத்தை தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனம் தங்களது சமூக வலைதள முகப்பு பக்கத்தை கருப்பு நிறத்தில் மாற்றியுள்ளது.
ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள்:
2023 ஜனவரி 23: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஓமன் தலைநகர் மஸ்கட்டுக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில நிமிடங்களில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது
2023 ஆகஸ்ட் 19: சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், 147 பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
2023 அக்டோபர் 7: சென்னையில் இருந்து துபாய் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
2024 ஜூன் 13: சென்னையில் இருந்து சிங்கபூருக்கு செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 5 மணி நேரம் தாமதாக இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் சிரமமடைந்தனர்.
2024 ஜூலை 18: டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்டது. இதனையடுத்து ரஷ்யாவில் உள்ள க்ராஸ்னோயர்ஸ்க் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
2024 அக்டோபர் 2: சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சிங்கப்பூரில் இருந்தே தாமதமாக சென்னைக்கு வந்தது. இதனால் சென்னையில் இருந்து அதிகாலை 1.40 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டது.

2024 அக்டோபர் 11: திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் சக்கரங்களை உள்ளிழுக்கும் ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் இரண்டு மணி நேரம் வட்டமடித்தது. பின்னர் விமானமானது பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. பின்னர் மாற்று விமானத்தில் பயணிகள் சார்ஜா சென்றனர்.
2025 ஜனவரி 10: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.