கடந்த ஜூலை 4 ஆம் தேதி நடைபெற்ற 14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி பெனால்டி ஷூட் முறையில் குவைத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
வெற்றிக் கொண்டாட்டத்தின் போது இந்திய கால்பந்து அணி வீரர் ஜீக்சன் சிங் ஏழு வண்ணங்களைக் கொண்ட மணிப்பூர் கொடியை போர்த்தி இருந்தார். இது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.
இதனிடையே, இது குறித்து ஜீக்சன் சிங், “இது என் மணிப்பூர் மாநிலத்தின் கொடி. இதை, நான் விரும்பினேன்.
இந்திய மக்களும், மணிப்பூர் மக்களும், வன்முறையை கையிலேந்தாமல் அமைதியாகக் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்தக் கொடியை நான் ஏந்தியிருக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர், “மணிப்பூரில் என்ன நடக்கிறது? இந்தியாவிலும் மணிப்பூரிலும் உள்ள அனைவரையும் சமாதானமாக இருங்கள் என்றும் சண்டையிட வேண்டாம் என்றும் கூற விரும்புகிறேன். எனக்கு அமைதி வேண்டும். 2 மாதங்கள் ஆகியும் இன்னும் சண்டை நடந்துவருகிறது.
இதுபோன்ற மோதல்கள் அதிகமாக நடைபெற நான் விரும்பவில்லை. உங்களுக்குத் தெரிந்த அமைதியைப் பெற அரசாங்கத்தின் மற்றும் பிறரின் கவனத்தை நான் கொண்டுவர விரும்புகிறேன்.
எனது குடும்பம் பாதுகாப்பாக உள்ளது. ஆனால் வீடு மற்றும் அனைத்தையும் இழந்த குடும்பங்கள் ஏராளம் உள்ளன” என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
மேலும், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக நான் கொடியுடன் வரவில்லை. எனது மாநிலமான மணிப்பூரில் நடக்கும் பிரச்னைகளை அனைவரின் கவனத்திற்கும் கொண்டுவரவே நான் முயன்றேன்.
இந்த வெற்றி அனைத்து இந்தியர்களுக்கும் சமர்ப்பணம்” எனவும் விளக்கம் அளித்திருந்தார்.
இருந்த போதிலும் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் நெட்டிசன்கள் ஜீக்சன் சிங்கை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், “ஜீக்சன் சிங் ஏற்கனவே தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் அறிக்கையை வெளியிட்டிருப்பதால், நாங்கள் இதை முன்னெடுத்துச் செல்லப் போவதில்லை” என்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) கூறியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்