அதிமுகவை பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வழிநடத்துவதில் தவறு இல்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பெரியார் வழிவந்ததாக சொல்லப்படும் திராவிட இயக்கமான அதிமுக, வீர சாவர்க்கர் வழி வந்தவர்களால் வழிநடத்தப்படுவது கவலைக்குரியது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நூற்றாண்டு கண்டிருக்கிறது. அம்பேத்கர், நேரு உள்ளிட்டோர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை புகழ்ந்துள்ளனர். நடிகர் விஜய் பேசியிருப்பது போல, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கருத்துகளை அண்ணா திமுக கேட்பது நல்லதுதான். ஆர்.எஸ்.எஸ். போன்ற ஒரு இயக்கம் அண்ணா திமுகவை வழிநடத்துவதில் என்ன தவறு? என்றார்.
மத்திய அமைச்சர் எல்.முருகனின் இந்த பேச்சு குறித்து கருத்து தெரிவித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பிடியில் அண்ணா திமுக சென்றுவிட்டது கவலைக்குரியது. தந்தை பெரியார் வழியில் வந்த திராவிட இயக்கம் என்று அறியப்படும் அதிமுக, கோல்வால்கர், வீர சாவர்க்கர் வழிவந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரால் வழிநடத்தப்படலாம் என்று சொல்வது கவலை அளிக்கிறது. இது பற்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் விளக்கம் தர வேண்டும் என்றார்.
