2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக- தவெக இடையேதான் போட்டி என பேசியுள்ள தவெக மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் செய்தியாளர்களிடம் ராஜேந்திர பாலாஜி இன்று ஜனவரி 31-ந் தேதி கூறியதாவது: தூத்துக்குடி சம்பவத்தை வைத்து செங்கோட்டையன், எடப்பாடியை விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் நடந்தது ஒரு போராட்டம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களை காப்பாற்றுவதற்காக காவல்துறை எடுத்த முடிவுதான் துப்பாக்கிச் சூடு.
ஆனால் கரூரில் அப்பாவி பொதுமக்கள், எதையும் அறியாத பொதுமக்கள் விஜய்யைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்திருக்கிறார்கள். அவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அதற்கும் இதற்கும் முடிச்சு போடுவது என்பது நகைப்பிற்குரியது.
இது இறந்த 41 உயிர்களை கேலி பேசுவதைப் போல, கிண்டல் செய்வதைப் போல, அந்த உயிர்களுக்கு அனுதாபம் தெரிவிக்காமல், அதற்குப் பரிகாரம் தேடாமல், அதை எள்ளி நகையாடுவதைப் போல பதில் சொல்வது என்பது தவெக கட்சிக்கு அழகல்ல.
திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்று சொல்லிக் கொண்டே இருக்கலாம்.. பூனை கண்ணை மூடிக்கிட்டு உலகம் இருண்டு போச்சுன்னு சொன்ன கதையா தான், அந்த மாதிரி கதையில தான் இப்ப தவெக இருக்கு. கருத்துக்கணிப்பு மட்டும் கிடையாது, ஊருக்குள்ள போய் விசாரிச்சால் தெரியும். நாங்க இப்போ ஒரு சாதாரண தெருமுனை பிரச்சாரம் பண்றோம், எவ்வளவு அதிமுக தொண்டர்கள் வந்து நிக்கிறான் பாருங்க.
இன்னைக்கு கூட்டணி கட்சி யாரும் வரல, அதிமுக தொண்டர் இவ்வளவு பேர் இருக்காங்க. மக்கள் இடத்தில எவ்வளவு ஒரு எழுச்சி, வரவேற்பு இந்த சிவகாசி பகுதியில் இருக்கு. உங்களுடைய வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் தேர்தலுக்கு பின்னாடி தெரிஞ்சு போகும்.
யாருக்கு யாருக்கு போட்டி, யார் ஜெயிக்கப் போறா, யார் ஆளப்போறாங்க, யார் கீழே விழப்போறா, குப்புற விழப்போறாங்க இதெல்லாம் தேர்தல் முடிவு காட்டிவிடும். அதிமுக தான் ஜெயிக்கும். அதிமுக தான் பலம் பொருந்திய கட்சி. எடப்பாடியார் தான் பலம் பொருந்திய தலைவர்.
இன்றைக்கு இருக்கின்ற அரசியல் தலைவர்களில் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே தலைவர் எடப்பாடியார் தான். அவர்தான் வெல்லுவார். அவருடைய தலைமையில் உள்ள கூட்டணி தான் வெற்றி வரும். அதிமுக – பாஜக கூட்டணி தான் வெற்றி வரும். எடப்பாடியார் தான் முதலமைச்சராக தனித்து ஆட்சி அமைப்பார்.
அண்ணன் டிடிவி போன்றவர்கள் வந்திருப்பது என்பது அதிமுக-வினுடைய ஓட்டுக்கள் சிந்தாமல் சிதறாமல் அப்படியே எடப்பாடியாருக்கு வந்து வரும்.
கொஞ்சம் கூட சிந்தாது, கொஞ்சம் கூட சிதறாது. அப்படியே அதிமுக ஓட்டுக்கள் அத்தனையும் இன்றைக்கு எடப்பாடியார் தலைமை ஏற்று வருவது என்பது அதிமுக-வுக்கு ஒரு மிகப்பெரிய பலம் தான், கூடுதல் பலம் தான்.
தேமுதிகவுடன் இதுவரைக்கும் எந்த பேச்சுவார்த்தையும் நடந்த மாதிரி தெரியல. அவங்க எங்க பேசுறாங்கன்னு தெரியாது, என்ன பண்றாங்கன்னு தெரியாது.
அதிமுக-வுடன் கூட்டணி சேர வேண்டும், திமுக-வை ஆட்சியை விட்டு விரட்ட வேண்டும் என்பதுதான் கேப்டன் விஜயகாந்த் கொள்கை. அதற்காகத்தான் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை அவர் ஆரம்பித்தார். அதைத் தெரிந்து தான் அவர்கள் முடிவெடுப்பார்கள் என்று நான் எண்ணுகிறேன். இவ்வாறு ராஜேந்திர பாலாஜி கூறினார்.
