கோவை அருகே அதிமுக பிரமுகரின் மனைவி, ஓட்டுநரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையை அடுத்த பன்னிமடை ஊராட்சி முன்னாள் தலைவராகவும், அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலராகவும் இருந்தவர் கவி சரவணகுமார். இவரது மனைவி மகேஸ்வரி (47). இத்தம்பதியினர் தங்களின் 2 குழந்தைகளுடன் தாளியூரில் வசித்து வந்தனர்.
அவர்களது வீட்டில் சுரேஷ் என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். வழக்கம் போல் நேற்று காலை கவி சரவணகுமார் வெளியே சென்றார். குழந்தைகளும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றதால், வீட்டில் மகேஸ்வரி மட்டும் தனியாக இருந்தார்.
அப்போது அங்கு வந்த ஓட்டுநர் சுரேஷ், மகேஸ்வரியை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு வடவள்ளி காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். இதுகுறித்து தடாகம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற தடாகம் காவல்துறையினர் மகேஸ்வரியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்ததாக சரணடைந்த சுரேஷிடம் கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக பிரமுகரின் மனைவி, வீட்டில் பணியாற்றிய ஓட்டுநரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
