தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பத்திரப் பதிவு கட்டணங்களின் உயர்வு, சொத்துவரி உயர்வு போன்றவற்றைக் கண்டித்து அக்டோபர் 8ஆம் தேதி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்டோபர் 2ஆம் தேதி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. தருமபுரியில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் போராட்டம் நடந்தது. நெல்லையில் அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
ஈரோட்டில் முன்னாள் துணை மேயர் பழனிசாமி தலைமையில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் அதிமுக தொண்டர்கள் ஈடுபட்டனர். கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அவர் “அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் உயர்ந்துள்ளது. சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. அதை தமிழக அரசு இதுவரை சரி செய்யவில்லை.
சென்னை மெரினாவில் நடந்த வான் சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் இறந்து போனார்கள். இந்தச் சூழ்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலைஞரின் பெயரில் பூங்கா திறந்துவைத்துள்ளார் ” என்று தமிழக அரசை ஜெயகுமார் விமர்சித்தார். இதுபோல அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பாக மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
14 புதிய தொழில் முதலீடு, 46,000 பேருக்கு வேலைவாய்ப்பு… அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!
இந்திய விமானப்படை நிகழ்ச்சி : மயங்கி விழுந்த வீரர்!
வினேஷ் போகத் வெற்றி… 20 ஆண்டுகளுக்கு பிறகு ஜுலானா தொகுதியை பிடித்த காங்கிரஸ்