சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையக் கூடும் என கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற குரல் அவ்வப்போது எழுகிறது. இந்த குரலை எழுப்பிய அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், தவெகவில் இணைந்துவிட்டார்.
அதிமுகவில் தற்போது சிவி சண்முகம் உள்ளிட்டோர் இந்த குரலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அண்மையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வமும், அதிமுகவின் பொதுக்குழுவில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம். அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை என்றால் டிசம்பர் 15-ந் தேதி முக்கிய முடிவை அறிவிப்பேன் என கூறியிருந்தார்.
இதன் பின்னர் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார் ஓபிஎஸ். இந்த சந்திப்பின் போதும், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் தாம் பேசுவதாக அமித்ஷா கூறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
