மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் கட்சியில் இருந்து இன்று (மார்ச் 7) நீக்கம் செய்யப்பட்டுள்ளார். vijayakumar removed from party
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சிக்கு அவப் பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார், (மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர்)
இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் யாரும் இவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் பொதுமக்கள், மாணவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. இந்த கையெழுத்து இயக்கத்தில், மும்மொழிக்கு ஆதரவாக விஜயகுமார் கையெழுத்திட்டதால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள விஜயகுமார், “பாஜகவினரின் வற்புறுத்தல் காரணமாக தான் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டேன். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து விளக்கமளித்து மன்னிப்பு கேட்க இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். vijayakumar removed from party