நெல்லையில் அதிமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக ஜான்சிராணி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 23) அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
அதிமுக போட்டியிடும் 33 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அண்மையில் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த சிம்லா முத்துச்சோழனுக்கு நெல்லை தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர்.
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஒரே பெண் இவர்தான். ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருக்கு அதிமுகவில் சீட் வழங்குவதா? என்று ஓபிஎஸ் தரப்பினர் கடுமையான விமர்சனம் செய்தனர். அதேவேளையில், சென்னையில் பிறந்து வளர்ந்த சிம்லா முத்துச்சோழனுக்கு நெல்லையில் சீட் ஒதுக்கியதற்கு உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்தநிலையில் தான் சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக திசையன்விளை பேரூராட்சி மன்ற தலைவரும் அதிமுக செயற்குழு உறுப்பினருமான ஜான்சிராணி நெல்லையில் போட்டியிடுவார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தென்சென்னையில் போட்டி: தமிழிசைக்கு மோடி சொன்ன மெசேஜ்!
அன்று பூஜ்ஜியம்… இன்று பாஜகவுடன் கூட்டணியா? – ராமதாஸை விமர்சித்த எடப்பாடி