பிரதமர் குறித்து அவதூறு: கூகுள் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்!

Published On:

| By Selvam

ai reply modi google notice

கூகுள் நிறுவனத்தின் ஏஐ தளமான ஜெமினியில் பிரதமர் மோடி குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சட்டவிரோதமாக பதில் அளித்ததாக, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சாட்ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் ஜெமினி என்னும் செயற்கை நுண்ணறிவு தளத்தை அறிமுகம் செய்துள்ளது. ஜெமினி ஏஐ தளத்தில் “பிரதமர் மோடி ஃபாசிஸ்டா?” என்று பயனர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஜெமினி ஏஐ, “பாஜகவின் இந்து தேசியவாத சித்தாந்தம், கருத்து வேறுபாடுகளை ஒடுக்குதல் மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை போன்ற கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதால் சில வல்லுநர்கள் பாசிசவாதியாக பிரதமர் மோடியை வகைப்படுத்தியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

இதே கேள்வியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறித்து கேட்டபோது, “தேர்தல்கள் என்பது வேகமாக மாறும் தகவல்களுடன் கூடிய சிக்கலான தலைப்பு. மிகவும் துல்லியமான தகவல் தேவை என்றால் Google தேடலை அணுகவும்” என்று தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியை பாசிஸ்டாக வகைப்படுத்தி ஜெமினி ஏஐ வெளியிட்ட கருத்துக்களை பலரும் தங்களது எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்தனர். பாஜகவினர் பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜூவ் சந்திரசேகர் கூறும்போது, “பிரதமர் மோடி குறித்த ஜெமினி ஏஐ தளத்தின் கருத்து IT சட்டத்தின் இடைநிலை விதிகளின் விதி 3(1)(b) இன் நேரடி மீறல்கள் மற்றும் குற்றவியல் சட்டத்தின் பல விதிகளை மீறுவதாகும்.

இதுகுறித்து விளக்கம் அளிக்கக்கோரி ஜெமினி ஏஐ தளத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவர்களின் பதில்கள் திருப்திகரமாக இல்லை எனில், கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தந்தை மறைவு: நலத்திட்ட உதவியில் அமைச்சர் சாமிநாதன்

ரணம் அறம் தவறேல்: விமர்சனம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share