கூட்டுறவுத்துறை மூலம் ரூ.12,000 கோடி பயிர்க்கடன்: அமைச்சர் ஐ.பெரியசாமி

Published On:

| By admin

கூட்டுறவுத்துறை மூலம் இந்த ஆண்டு ரூ.12,000 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
தஞ்சையில் நடந்த குறுவை சாகுபடி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களிடம் பேசியபோது, “கடந்த ஆண்டு ரூ.10,292 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.12,000 கோடியை தாண்டி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களுக்கு இதுவரை ரூ.1,400 கோடி வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ரூ.2,800 கோடியாக உயர்த்தி வழங்கியுள்ளோம்.
காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு அதிகப்படியாக பயிர்க்கடன் வழங்கப்படும். கூட்டுறவு சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படும். மேலும் கடனை விவசாயிகளிடம் கொண்டு செல்வது எளிமைப்படுத்தப்படும். முதற்கட்டமாக காவிரி டெல்டாவில், தஞ்சை மாவட்டத்தில், விவசாயிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, கூட்டுறவு கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஒத்திகை பார்க்கப்படும். பின்னர் விவசாயிகளின் வீடு தேடிச்சென்று பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சங்க செயலாளர்கள் விவசாயிகளிடம் கனிவான முறையில் நடந்துகொள்ள வேண்டும். தவறு இழைக்கும் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share