கேரளாவைச் சேர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளி 24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார் (Kerala Sex Offender Was Caught in Chennai).
கேரளா நிரமன்கர பகுதியைச் சேர்ந்தவர் டியூசன் ஆசிரியர் முத்துக்குமார். 2001-ம் ஆண்டு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக முத்துக்குமார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 3 மாதம் சிறையில் இருந்த முத்துக்குமார் ஜாமீனில் வெளியே வந்தார்.

ஆனால் ஜாமீனில் விடுதலையான பின்னர் கேரளாவை விட்டு தப்பி ஓடி தலைமறைவானர் முத்துக்குமார். பாலியல் வன்கொடுமை வழக்கில் நீண்டகாலம் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த முத்துக்குமாருக்கு எதிராக பிடிவாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் கேரளா போலீசாருக்கு 24 ஆண்டுகளாக ‘டிமிக்கி’ கொடுத்து வந்த முத்துக்குமார் சென்னையில் கடந்த புதன்கிழமையன்று வசமாக சிக்கி இருக்கிறார்.
24 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த முத்துக்குமார் சிக்கியது எப்படி?
முத்துக்குமார் கைது தொடர்பாக கேரளா மாநில போலீசார் வெளியிட்டுள்ள தகவல்கள்:
- 2001-ம் ஆண்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த முத்துக்குமார் கேரளாவை விட்டு தப்பி ஓடினார்.
- தமிழகத்தில் நாகர்கோவிலில் தமது சகோதரியுடன் சிறிதுகாலம் வசித்தார். பின்னர் தென்காசிக்கு சென்றார்.
- தென்காசியில் இருந்து சென்னைக்கு வந்த முத்துக்குமார், திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தின் மூலம் முத்துக்குமாருக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.
- முத்துக்குமாரின் மனைவி உடல்நலக் குறைவால் இறந்துவிட 2-வதாகவும் சென்னையிலேயே திருமணம் செய்திருக்கிறார்.
- அத்துடன் முத்துக்குமார், கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, ‘சாம்’ என பெயர் மாற்றினார். சென்னை அயனாவரத்தில் முத்துக்குமார், சாம் என்ற பெயரில் மத போதகராகவும் பணிபுரிந்து வந்தார்.
- கேரளா போலீசாருக்கு தம்மைப் பற்றி எந்த ஒரு தகவலும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக வங்கி கணக்குகள் உள்ளிட்ட எந்த ஒரு டிஜிட்டல் ஆவணத்தையும் முத்துக்குமார் வைத்திருக்கவில்லை.
- கேரளா வாஞ்சியூரில் உள்ள குடும்பத்தினரை கூட செல்போனில் தொடர்பு கொள்வதில்லை; வெவ்வேறு லேண்ட் லைன் எண்களில் இருந்து மட்டுமே முத்துக்குமார் தொடர்பு கொண்டு பேசியதால் அவரது இருப்பிடத்தை கேரளா போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
- முத்துக்குமார், கேரளாவில் உள்ள தமது குடும்பத்தினரின் வங்கி கணக்குகளுக்கு வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு நபர்கள் மூலமாகவே பணம் அனுப்பியும் வந்துள்ளார்.
- முத்துக்குமாரின் இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் தொடர்ந்து கண்காணித்தனர் கேரளா போலீசார். முத்துக்குமாரின் குடும்பத்துக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்ட வங்கி கணக்குகள், அதில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் எண்கள், முத்துக்குமார் பேசிய லேண்ட் லைன் எண்கள் ஆகிய அனைத்தையும் வைத்து சென்னையில் முகாமிட்டு கேரளா போலீசார் ஒருவழியாக முத்துக்குமார் (‘சாம்’) என்ற பாலியல் வழக்கின் குற்றவாளியை சென்னையில் கடந்த புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
