சவுதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தண்டனை தள்ளி வைக்கப்பட்ட நபரை அவரின் தாயார் மற்றும் உறவினர்கள் சந்தித்து பேசினர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். கடந்த 2006ஆம் ஆண்டு சவுதி அரேபிய சிறுவனை கொலை செய்த வழக்கில் ரியாத் சிறையில் 18 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார். குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சவுதி சிறுவனின் குடும்பத்தினர் பொதுமன்னிப்பு வழங்க மறுத்ததை அடுத்து ரஹீமுக்கு 2018 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்க முன்வந்தால், ரஹீமுக்கு மன்னிப்பு வழங்க தாங்கள் தயாரென அந்த சிறுவனின் குடும்பம் அறிவித்தது. இதனையடுத்து, ரியாத்தில் செயல்பட்டுவரும் இந்திய அமைப்புகள், சில தொழிலதிபர்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைவரும் நிதியுதவி அளித்தனர். இதனையடுத்து ஒரே வாரத்தில் ரூ 34 கோடி திரண்டது. தொடர்ந்து சவுதி அரேபிய குடும்பத்தினரிடம் அந்த தொகை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது, நீதிமன்றம் மரண தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் ரியாத்திலுள்ள அல் இஸ்கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஹீமை அவரின் தாயார் பாத்திமா, சகோதரர் மற்றும் மாமா ஆகியோர் சந்தித்து பேசினார். அப்போது, ரஹீம் மிகவும் எமோஷனலாக காணப்பட்டார். 18 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினரை அவர் சந்திக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, கொல்லப்பட்ட சிறுவனின் குடும்பத்துக்கு கொடுக்க பணம் திரட்டப்பட்டு விட்டாலும், சவுதி சட்டப்படி சில நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. இதனால், ரஹீம் இப்போதும் சிறையில்தான் உள்ளார். ஆனால், விரைவில் அவர் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
தடாலடியாக வீழ்ந்த தங்கம் விலை… வாங்குவதற்கு சரியான டைம் மக்களே!
’குரூப் 4 காலி பணியிடங்கள் இனி அதிகரிக்கப்படாது’ : டிஎன்பிஎஸ்சி திட்டவட்டம்!
