அதிமுக அலுவலக சீல்: உயர் நீதிமன்றத்தில் விசாரணை எப்போது?

Published On:

| By Guru Krishna Hari

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய வழக்கு தலைமை நீதிபதி ஒப்புதலுக்கு பிறகே விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் (ஜூலை 11) ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் ஆயுதங்களுடன் தாக்கி பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் போலீசார் உட்பட இருதரப்பையும் சேர்ந்த மொத்தம் 47 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். மேலும் , அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதற்கிடையே அதிமுக அலுவலகத்துக்கு வருவாய்துறையால் வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஓபிஸ் தரப்பில் நேற்று வழக்கறிஞர் ராஜலட்சுமியும், இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணனும் ஆஜராகி அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென தனிதனியாக முறையீடு செய்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், மனுத்தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை (ஜூலை 13) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து இரு தரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்க்கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதலுக்கு பிறகே விசாரிக்கப்படும் என்றும், ஓபிஎஸ், இபிஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களும் உரிய நடைமுறைகளை பின்பற்றி பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share