பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம்: தேர்தல் ஆணையத்தின் முடிவு எப்போது?: சி.வி.சண்முகம்

Published On:

| By Kavi

அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு 2,501 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர் என சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்குத் தேர்தலில் ஈபிஎஸ் அணி சார்பில் தென்னரசுவும், ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில் முருகனும் நிறுத்தப்பட்டனர். இந்தச்சூழலில் இரட்டை இலை சின்னத்தைக் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடினார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

இந்த வழக்கில் பொதுக்குழுவைக் கூட்டி இரு தரப்பும் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பினார். அதில் அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் தென்னரசுவை ஆதரிக்கிறீர்களா, இல்லையா என தெரிவித்து அதற்கான படிவத்தைப் பிப்ரவரி 5 மாலை 7 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இதில் ஒரே ஒரு வேட்பாளரை மட்டும் குறிப்பிட்டு ஆதரிக்கிறீர்களா, இல்லையா என கேட்பது சரியல்ல எனக் கூறி தமிழ் மகன் உசேன் அனுப்பிய கடிதத்தைப் புறக்கணித்தார் பன்னீர் செல்வம்.

ஆனால் திடீர் திருப்பமாக இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கு,ப.கிருஷ்ணன், “எங்கள் தரப்பு வேட்பாளர் திரும்ப பெறப்படுகிறார். இரட்டை இலை சின்னம் முடக்கப்படக் கூடாது என்பதற்காக திரும்பப்பெறுகிறோம். இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரச்சாரம் செய்வோம்” என்று கூறினார்.

இதனிடையே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. மற்றும் தமிழ் மகன் உசேன், உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

admk General Committee members letter

பின்னர் இன்று (பிப்ரவரி 6) பிற்பகல், அதிமுக வேட்பாளரை ஆதரித்து பொதுக்குழு உறுப்பினர்கள் அனுப்பிய கடிதங்கள் தொடர்பான ஆவணங்களைத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார் தமிழ் மகன் உசேன்.

இதைத்தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய தமிழ் மகன் உசேன், “பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற ஆவணங்களைத் தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்திருக்கிறோம். அதற்கு உரிய நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசுவை பொதுக்குழு தேர்வு செய்திருக்கிறது” என்றார்.

அவரைத்தொடர்ந்து பேசிய சி.வி.சண்முகம், “மொத்தம் 2665 உறுப்பினர்கள் இருந்தனர். இதில் 15 பேர் இறந்துவிட்டனர். இரண்டு பேர் இப்பொறுப்பிலிருந்து விலகிவிட்டனர். இரண்டு பேர் மாற்றுக் கட்சிகளுக்குச் சென்றுவிட்டனர்.

admk General Committee members letter

இந்த 19 பேரைத் தவிர 2646 பேர் வாக்களிக்க உரிமை பெற்றவர்கள். இவர்கள் அனைவருக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. நேரடியாகவும், மெயில் மூலமாகவும், வாட்ஸ் அப் வழியாகவும் அனுப்பப்பட்டது.

அப்படி அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தென்னரசு பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இவரை ஏற்கிறோம், ஏற்கவில்லை அல்லது வேறு ஒரு வேட்பாளரை தேர்வு செய்ய விரும்பினால், அவரது பெயரை முன்மொழியலாம் என தெளிவாகச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு பெயர் மட்டும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள், அது தவறு.
அதுபோன்று வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள தென்னரசு பெரும்பான்மை வாக்குகள் பெற்றுள்ளார். 2501 வாக்குகளை தென்னரசு பெற்றுள்ளார்.

இதில் மறுப்பு என ஒருவாக்கும் வரவில்லை. ஆனால் 145 வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை. இதுதான் நிலைமை” என்றார்.

மேலும் அவர், “தமிழ் மகன் உசேனால் தெரிவிக்கப்படுகின்ற முடிவைத் தேர்தல் ஆணையம் அதிமுகவின் அதிகாரப்பூர்வமானதாக எடுத்துக்கொண்டு அதன் மீது உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் படி தேர்தல் ஆணையம் ஆவண செய்வதாக கூறியுள்ளது. நாளை வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாள். அதற்குள் தேர்தல் ஆணையம் முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம்” என கூறினார்.

ஓபிஎஸ் வேட்பாளர் திரும்பப் பெற்றது தொடர்பாகப் பேசிய அவர், ஆடத் தெரியாதவர்கள் மேடை சரியில்லை என்பார்கள். அந்த கதையைப் பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை என விமர்சித்தார்.

பிரியா

என்னோட ஆசை அவங்க ஜெயிக்க கூடாது அவ்ளோ தான்: ஜெயவர்தனே அதிரடி கருத்து!

தாம்பரம்: ஓடும் காரில் தீ விபத்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share