கரூர் பெருந்துயரில் உயிரிழந்தவர்களுக்கு அதிமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று (டிசம்பர் 10) அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறுகிறது.
அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசைன் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் உடல்நல குறைவால் கூட்டத்திற்கு வருகை தராத நிலையில் தற்காலிக அவை தலைவராக கேபி முனுசாமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இதைத்தொடர்ந்து கே.பி.முனுசாமி தலைமையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.பொதுக் குழுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். குறிப்பாக கரூர் பெருந்துயர சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதே போல் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து, கேரள மாநில முன்னாள் முதல்வர் வி.எஸ் அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபுசோரன், நாகாலந்து மாநில ஆளுநர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, நடிகை சரோஜா தேவி, ஏவிஎம் சரவணன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உள்ளிட்ட மறைந்த அதிமுக உறுப்பினர்களுக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும் இறந்தவர்களுக்கு கூட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
