’ஏய்… சத்யா… யார் மேல கை வைக்கிறே?’ எடப்பாடி கண் முன்னே மோதிக் கொண்ட மா.செ.க்கள்!

Published On:

| By Aara

admk district secarataries clash

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (அக்டோபர் 17) அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பூத் கமிட்டி மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டத்தைக் கூட்டியிருந்தார்.

அந்தக் கூட்டத்தில் பேசும்போது, “பூத் கமிட்டிகளின் உண்மைத் தன்மையை நீங்கள்தான் உறுதி செய்ய வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் இதற்கு தடையாக இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். மாவட்டச் செயலாளர்களுக்கு பயந்துவிடாதீர்கள். அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று பேசியிருந்தார்.

ADVERTISEMENT

இந்த அளவுக்கு மாசெக்கள் மீது எடப்பாடி பாய்ந்திருப்பதன் காரணம் குறித்து விசாரிக்கும்போது… நேற்று காலை அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த இரு மாசெக்கள் இடையிலான மோதலும் எடப்பாடி பழனிசாமியை இவ்வாறு பேசத் தூண்டியற்கு ஒரு காரணம் என்கிறார்கள் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள்,

அப்படி என்ன நடந்தது?

ADVERTISEMENT

அதிமுகவின் 52வது துவக்க நாளான நேற்று அக்டோபர் 17 ஆம் தேதி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டிலிருந்து இராயப்பேட்டை தலைமை கழகத்திற்கு காலை 11.15 மணியளவில் புறப்பட்டு வந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

அவரை வரவேற்க தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் மற்றும் தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் தி நகர் சத்யா ஆகிய இருவரும் அவரவர் ஆதரவாளர்களைக் கூட்டியிருந்தனர்.

ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமி கார் தலைமை கழகத்தை நெருங்கிய போது தி நகர் சத்யா, எடப்பாடியின் காருக்கு முன்னால் சென்றபடி… ‘ஒதுங்கு ஒதுங்கு’ என்று வரவேற்க நின்றவர்களை தள்ளியபடி சென்றார். அந்த நேரத்தில் ஆதிராஜாராமின் ஆதரவாளர்களையும் கை வைத்து தள்ளிவிட்டார்.

உடனே ஆதிராஜாராமும் அவரது ஆதரவாளர்களும், ‘ஏய் சத்யா யார் மேல கை வைக்கிற?’ என்று சத்தம்போட பதிலுக்கு சத்யா ஆட்களும் சத்தம்போட அடுத்த வினாடியே தள்ளுமுள்ளானது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் இரு தரப்பினரையும் விலக்கிவிட்டு அமைதிப்படுத்தினார்கள்.

இதைப் பார்த்த எடப்பாடி பழனிசாமி டென்ஷனாகியபடியே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்திவிட்டு மீட்டிங் ஹாலுக்கு சென்றார்.

பூத் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஆதிராஜாராம் மற்றும் சத்யா மீது இருந்த கோபத்தை மாவட்டச் செயலாளர்கள் மீது பொதுவாக வெளிப்படுத்தினார் எடப்பாடி.

காவல்துறை கண்டுக்கொள்ளாமல் இருந்திருந்தால் சத்யா தரப்பினருக்கும் ஆதிராஜாராம் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கும் என்கிறார்கள் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள்.

வணங்காமுடி

“விஜய் படம் என்றாலே ஏதோ ஒரு பிரச்சினை” : லோகேஷ் கனகராஜ்

மருத்துவமனை தாக்குதல் இஸ்ரேல் செய்யவில்லை- ஐஎஸ்ஐஎஸ் சை விட கொடியது ஹமாஸ்: அமெரிக்க அதிபர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share