தமிழகத்தில் பாஜகவுடனான அதிமுகவின் கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில், அக்கட்சிகளின் அடுத்தடுத்த நிர்வாகிகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெயலலிதா காலமானபிறகு முதல்வராக இருந்த ஓ.பன்னீரை மாற்றிவிட்டு சசிகலா முதல்வராக முனைந்தார். அப்போது பாஜகவின் ஆதரவோடு அதிமுகவை உடைத்த ஓ. பன்னீர் செல்வம், தர்மயுத்தம் நடத்தினார். சசிகலா அப்போது எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதன் பின் சசிகலா, அவரால் அதிமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் ஆகியோரை எதிர்த்தார் எடப்பாடி பழனிசாமி. இதன் அடிப்படையில் ஓ.பன்னீரும், எடப்பாடியும் இணைந்து அதிமுகவை கைப்பற்றினார்கள். மத்திய அரசின் தமிழக பிரதிநிதியான ஆளுநர் வித்யாசகர் ராவே இவர்கள் இருவரையும் கரம் கோர்த்து சேர்த்து வைத்தார்.
அதன் பின் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்தன. உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி அமைத்தன. ஆனால் இரு ஆளுங்கட்சிகளும் கூட்டணி அமைத்தும் வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிட, 18 தொகுதிகளில் நடந்த மினி சட்டமன்ற இடைத்தேர்தலில்தான் அதிமுக தீவிர கவனம் செலுத்தியது என்று தேர்தல் முடிவுகளுக்குப் பின் அதிமுக மீது பாஜக குற்றம் சாட்டியது. பல பாஜக வேட்பாளர்கள், தங்களுக்காக அதிமுக அமைச்சர்கள் முழுமையாக பணியாற்றவில்லை என்று தலைமைக்கு புகார்கள் அனுப்பினர். இந்நிலையில் தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி தொடருமானால் அதிமுக இயல்பாக பெற வேண்டிய இடங்களைக்கூட பெற முடியாமல் போகும் என்பதுதான் அதிமுக தலைமைக்குக் கிடைத்திருக்கும் ரிப்போர்ட். ஆட்சி முடியும் வரை மத்திய அரசு சொல்லும் அனைத்துக்கும் தலையாட்டிவிட்டு தேர்தலில் பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிடலாம் என்பதே அதிமுக மேலிடத்தில் நடக்கும் ஆலோசனை.
இந்த சூழலில் இன்று (ஆகஸ்டு 8) சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரிடம், “அடுத்த தேர்தலிலும் இதே கூட்டணி தொடருமா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இந்தக் கேள்விக்கு, “தேர்தல் வருகின்ற காலத்தில் அதுபற்றி பேசலாம்” என்று மூன்றே வார்த்தைகளில் பதிலளித்து அந்தக் கேள்வியைக் கடந்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இப்போது பாஜக அதிமுக கூட்டணி இருக்கிறது என்றோ, அது தொடரும் என்றோ முதல்வர் பதிலளிக்கவில்லை. எனவே பாஜகவுடனான கூட்டணியைத் தொடரும் எண்ணத்தில் அதிமுக இல்லை என்பதைத்தான் சூசகமாக சொல்கிறாரா எடப்பாடி பழனிசாமி என அதிமுகவினரிடையே விவாதம் நடக்கிறது.
**வேந்தன்**�,