மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அடியே‘.
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர்ஜே விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
‘கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். பேரலல்யுனிவெர்ஸ் மற்றும் ஆல்டர்நேட் ரியாலிட்டி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. தயாரிப்பாளர் பிரேம்குமார், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், நடிகர் ஜீ.வி. பிரகாஷ் குமார், நடிகை கௌரி ஜி. கிஷன், ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், படத்தொகுப்பாளர் முத்தையன், நடிகர் மதும்கேஷ் பிரேம் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது தயாரிப்பாளர் பிரேம்குமார் பேசுகையில்,
”எங்கள் நிறுவனத்தின் முதல் திரைப்படமான ‘அடியே’ திரைப்படம் மிகப்பெரியளவில் வெற்றியடையும். ஜி. வி. பிரகாஷ் குமாரின் ஒத்துழைப்பு மறக்க இயலாது. கேட்கும் பொழுதெல்லாம் எந்த தடையும் இல்லாமல் முழு மனதுடன் வருகை தந்து நடித்துக் கொடுத்தார். தொடர்ந்து நல்ல படங்களை வழங்கி தமிழ் திரையுலகில் தரமான தயாரிப்பு நிறுவனமாக எங்கள் நிறுவனம் வளரும்” என்றார்.
நாயகி கௌரி ஜி. கிஷன் பேசுகையில்,
“என் வாழ்க்கையில் எப்போதும் எதிர்பாராமல் தான் அனைத்தும் நடந்திருக்கிறது. 96 படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை போல்.. இந்த திரைப்படத்திலும் ஒரே ஒரு போன் கால் மூலம் கதையைக் கேட்டு, உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன். பொதுவாக கதைகளை கேட்டு பொறுமையாக தான் தேர்வு செய்து நடிப்பேன். ஆனால் அடியே படத்தின் கதையை முழுமையாக கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டேன். அதற்கு மற்றொரு காரணம் ஜி. வி. பிரகாஷ் குமார். அவருடைய இசைக்கு நான் ரசிகை. அவருடைய இசைக்கு அனைவரும் ரசிகர்கள் என்றாலும், இந்த படத்தில் அவருடைய நடிப்பு நன்றாக இருக்கும். அவருடன் இணைந்து நடித்தது மறக்க இயலாத வித்தியாசமான அனுபவம். இந்த படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயரில் பாடல் ஒன்றும் இடம் பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் என்னுடைய திரையுலக பயணத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” என்றார்.
படத் தொகுப்பாளர் முத்தையன் பேசுகையில்,
”இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் படத்தொகுப்பை மேற்கொள்ளும் போது இயக்குநரும், நடிகர் ஜீவி பிரகாஷ் குமாரும் ஏராளமான ஆலோசனைகளை வழங்குவர். ஜி. வி. பிரகாஷின் சமூகம் குறித்த பார்வையும், எண்ணங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் படம் மிகச் சிறப்பாக உருவாகி இருக்கிறது. அனைவரும் கண்டு ரசிக்க வேண்டும்.” என்றார்.
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசுகையில்,
”மாலி & மான்வி பட தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிய பிறகு வேறு தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றும்போது சற்று கடினமாக இருக்கும். ஏனெனில் இங்கு அனைவரையும் சௌகரியமான சூழலில் பணியாற்ற அனுமதிப்பார்கள். படத்தின் தயாரிப்பாளரை முதன்முதலாக சந்தித்தபோது.. வெள்ளை வேட்டி, தாடி.. ஆகியவற்றுடன் ஒரு டான் ஃபீலில் இருப்பார். அதன் பிறகு அவருடன் பழகப் பழக.. அவர் வில்லன் இல்லை ஹீரோ என்று தெரிந்து கொண்டேன். அவருடன் ஓராண்டுக்கு மேலாக பழகி வருகிறோம். ஒரு முறை கூட அவர் முகம் சுழித்தோ… கோபப்பட்டோ.. பார்த்ததில்லை. எப்போதும் அவருடைய முகத்தில் ஒரு புன்சிரிப்பு இருந்து கொண்டே இருக்கும். எங்களை நம்பி முதலீடு செய்திருக்கிறார். நாங்கள் கடினமாக உழைத்து சிறந்த படைப்பை வழங்கி இருக்கிறோம் என நம்புகிறோம்.
‘அடியே’ அடிப்படையில் ஒரு அழகான காதல் கதை. குறும்பும், வேடிக்கைகளும் நிறைந்த கதை. பேரலல் யுனிவர்ஸ் ஆல்டர்நேட் ரியாலிட்டி ஆகியவற்றுடன் கலந்த ஒரு கதை. ஒரு வித்தியாசமான திரைப்படம். நம்பிக்கையுடன் கடினமாக உழைத்திருக்கிறோம். ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
ஜீ. வி. பிரகாஷ் குமார் பேசுகையில்,
”இந்த திரைப்படம் வழக்கமான திரைப்படம் அல்ல. வித்தியாசமான படைப்பு. புது அனுபவம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த படத்தை தாராளமாக திரையரங்கிற்கு சென்று கண்டு ரசிக்கலாம்.
பயில்வான் இரண்டு ஆஸ்கார் விருது வாங்கியிருப்பார்.. சென்னையில் பனி மழை.. நடிகர் கூல் சுரேஷ் ஊமை.. என இயக்குநர் ஒவ்வொரு நாளும் எனக்கு அதிர்ச்சிகளை கொடுத்துக் கொண்டே இருப்பார். வித்தியாசமான படைப்பாளியாக இருக்கிறாரே..! என நினைக்க வைப்பார்.
தயாரிப்பாளர் பிரேம்குமாருக்கு நன்றி. படத்தை தெளிவாக திட்டமிட்டு நிறைவு செய்திருக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் வலிமையான பட தயாரிப்பு நிறுவனமாக உயர்வார்கள்.இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியான முதல் படம் டிஜிட்டல் தளத்தில் வெளியானது. அவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ‘அடியே’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டம் வெளியான பிறகு அவருக்கு திரையுலகிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. விரைவில் அவரும் முன்னணி இயக்குநராக உயர்வார். ” என்றார்.
இராமானுஜம்
அதிமுக மாநாடு – விபத்தில் 8 பேர் பலி: ஈபிஎஸ் நிதியுதவி!
கல்லூரிக்குள் நாட்டு வெடி குண்டு வீச்சு?: சென்னையில் அதிர்ச்சி!