புதிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி, இன்று (ஜூலை 29) அவரிடமே மன்னிப்பு கேட்டுள்ளார்.
புதிய குடியரசுத் தலைவராய் பதவியேற்றிருக்கும் திரெளபதி முர்முவை காங்கிரஸ் கட்சியின் எம்பியும், காங்கிரஸ் மக்களவைத் தலைவருமான ஆதிர் ரஞ்சன் செளத்ரி, ‘ராஷ்டிர பத்னி’ என விமர்சனம் செய்திருந்தார். இது சர்ச்சையை கிளப்பியது. இப்படி அவமரியாதையாகப் பேசியதற்கு, ஆதிர் ரஞ்சன் செளத்ரியும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோர் வலியுறுத்தினர்.
பின்னர், இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஆதிர் ரஞ்சன் செளத்ரி, “ஜனாதிபதியிடம் நேரில் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன். ஆளுங்கட்சி விரும்பினால், என்னை தூக்கில் போடுங்கள்” எனக் கூறினார். இதையடுத்து, பாஜக எம்.பிக்கள் நேற்று (ஜூலை 28) நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, நேற்று காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்திருந்தார்.

அதில் அவர், “இந்தியாவின் குடியரசுத் தலைவர் பிராமணராக இருந்தாலும், பழங்குடியினராக இருந்தாலும், அனைவராலும் மதிக்கப்பட வேண்டும். விஜய்சவுக் பகுதியில் நேற்று (ஜூலை 27) போராட்டம் நடத்தியபோது, ‘எங்கு போகிறீர்கள்’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு நான், ராஷ்டரபதிக்கு என்று சொல்வதற்குப் பதில் ’ராஷ்ட்ரபத்னி’ என்று வாய் தவறி கூறிவிட்டேன். இதை பாஜக பிரச்சினையாக மாற்றுகிறது. இதில் மன்னிப்பு என்ற வார்த்தைக்கே இடமில்லை” என விளக்கமளித்திருந்தார்.
ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பேசியதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ‘அவர் ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுவிட்டார்’ என்று கூறினார். இந்த நிலையில், ஆதிர் ரஞ்சன் செளத்ரியும், சோனியா காந்தியும் வேறு வேறு பதில்களை தெரிவித்திருந்தது பிஜேபியினரிடம் பெரும் சர்ச்சயை கிளப்பியது.
இதையடுத்து, இன்று (ஜூலை 29) காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்ரி மன்னிப்பு கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ராஷ்டிர பத்னி என்கிற வார்த்தை வாய் தவறி வந்த வார்த்தை என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்