முதல் போக பாசனத்துக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கரில் இரு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதல் போக பாசனத்துக்காக கடந்த 1ஆம் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது பாசனத்துக்கு 200 கன அடி, தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக 100 கன அடி வீதம் என விநாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்தத் தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் நாற்றங்கால் அமைத்து நெற்பயிர் சாகுபடி செய்து உள்ளனர். இதற்கிடையே கடந்த 5ஆம் தேதி கூடுதலாக விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது விவசாயிகள் வயல்களில் உழவு பணி செய்து வருகின்றனர். இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை மேலும் கூடுதலாக விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கிடையே நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம் 131.15 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 137 கன அடியாகவும் இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் லோயர் கேம்பில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு ஜெனரேட்டர் மூலம் விநாடிக்கு 36 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி தற்போது 45 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.
**ராஜ்**