உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10ல் இருந்து வெளியேறிய அதானி

Published On:

| By christopher

ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை எதிரொலியாக உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து கெளதம் அதானி வெளியேறியுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக உலகம் மற்றும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் அதானி, துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான பல்வேறு இலாபமிக்க தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில் அதானி குழுமம் பல ஆண்டுகளாக பங்குச்சந்தை முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது.

அதனைத்தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடும் சரிவைச் சந்தித்தன.

ADVERTISEMENT

கடந்த வாரத்தைத் தொடர்ந்து இன்று காலையும் அதானி குழுமத்தின் பெரும்பாலான நிறுவனங்கள் பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

அதன்படி சென்செக்ஸ் புள்ளியில் அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி வில்மர், அதானி பவர், என்டிடிவி மற்றும் அதானி போர்ட் தொடர் சரிவில் சிக்கியுள்ளன.

ADVERTISEMENT

உலகளவில் 500 பணக்காரர்களின் பட்டியலை ப்ளூம்பெர்க் தினசரி வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிடப்பட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில், பங்குகள் சரிவால் அதானி டாப் 10 பட்டியலில் இருந்து 2 வருடத்திற்கு பிறகு வெளியேறியுள்ளார்.

ஏற்கெனவே 84.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் 3வது இடத்தில் இருந்த அதானி 7வது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 3 வர்த்தக நாட்களில் தனிப்பட்ட சொத்து மதிப்பில் 34 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்த நிலையில், தற்போது 11வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில் உலகின் பணக்காரர்கள் வரிசையில் லூயிஸ் விட்டனின் பெர்னார்ட் அர்னால்ட் முதலிடத்தையும், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ட்விட்டரின் உரிமையாளர் எலோன் மஸ்க் 2வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

”ஜெயலலிதா கட்சியவே இங்கு சிலர் ஏலம் விடுறாங்க!” – முதல்வர் ஸ்டாலின்

விஜய்யுடன் இணையும் பிரியா ஆனந்த்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share