அதானி குழும முறைகேடு : நிபுணர் குழு அமைக்க ஒப்புதல்!

Published On:

| By Kavi

அதானி குழும முறைகேடு விவகாரம் தொடர்பாக நிபுணர் குழு அமைத்து விசாரிக்க ஆட்சேபம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று (பிப்ரவரி 13) ஒப்புதல் தெரிவித்துள்ளது.

அதானி குழுமம் மீது குற்றம்சாட்டிய ஹிண்டன்பர்க் அறிக்கையை விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் விஷால் திவாரி மற்றும் மனோகர் லால் சர்மா ஆகியோர் தாக்கல் செய்த இரண்டு பொதுநல மனுக்களை தலைமை நீதிபதி டிஒய். சந்திரசூட், நீதிபதி பிஎஸ் நரசிம்ஹா மற்றும் நீதிபதி ஜேபி பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு பரிசீலித்து விசாரித்து வருகிறது.

கடந்த 10ஆம் தேதி இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதானி குழுமம் பற்றிய ஹிண்டென்பர்க் அறிக்கையால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். இந்திய முதலீட்டாளர்களின் நலனை பாதுகாப்பது எப்படி? என்று செபியிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

பங்குச்சந்தையை எப்படி வலுப்படுத்தலாம் என்பதைத் தெரிவிக்குமாறு செபிக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று (பிப்ரவரி 13) விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

அப்போது, செபி அமைப்புதான் ஹிண்டென்பர்க் அறிக்கையை விசாரிப்பதற்கான சரியான அமைப்பு. அதே வேளையில் முதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு விசாரணை குழு அமைக்க மத்திய அரசு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காது.

இது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் விவகாரம் என்பதால் குழுவை அமைப்பதற்கான நிபுணர்களின் பெயர்களை சீலிடப்பட்ட கவரில் மத்திய அரசு வழங்கும் என்றார்.

இதை விசாரித்த நீதிபதிகள் விசாரணைக் குழு அமைப்பது தொடர்பான முடிவை வரும் பிப்ரவரி 17ஆம் தேதி தெரிவிக்குமாறு கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

பிரியா

பிரபாகரன் உயிரோடு வந்தால்… சீமான் பதில்!

“தயவு செய்து அழைக்காதீர்கள்”: வோடாபோனிடம் சீறிய ஜெட் ஏர்வேஸ் சிஇஓ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share