இந்தி மொழியின் புகழ்பெற்ற செய்தித் தாள் டைனிக் பாஸ்கர் ஆகும். கோடிக்கணக்கான இந்தி வாசகர்களைக் கொண்டுள்ள இந்த செய்தித் தாளின் அனைத்து அலுவலகங்களிலும் இன்று (ஜூலை 22) வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய பிரதேசத்தின் போபாலைத் தலைமையிடமாக கொண்ட டைனிக் பாஸ்கர், நாட்டில் அதிகம் விற்பனையாகும் இந்தி நாளிதழ்களில் ஒன்றாகும். நொய்டா, ஜெய்ப்பூர், போபால், இந்தூர், மும்பை, பாட்னா உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள அந்த செய்தித்தாள் அலுவலகங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. இதனுடன், குழுவின் உரிமையாளர்களின் வீடுகளிலும் வருமான வரித் துறை சோதனை செய்கிறது. லக்னோவை தளமாகக் கொண்ட பாரத் சமச்சார் தொலைக்காட்சி சேனல் மற்றும் அதன் ஆசிரியர் பிரஜேஷ் மிஸ்ரா ஆகியோருக்கு சொந்தமான வளாகத்திலும் தனித்தனியாக சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. டைனிக் பாஸ்கர் செய்தித்தாளின் விளம்பரதாரர்களின் குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.
வரி ஏய்ப்பு வழக்கில் வருமான வரித்துறை இந்த சோதனையை நடத்தி வருவதாக செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் தாக்கல் செய்த வருமான வரி ஆவணங்களில் வருமான வரித்துறை திருப்தி அடையவில்லை என்று வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், இந்த ரெய்டு இந்தி பேசும் மாநிலங்களில் பெரும் அரசியல் பிரச்சினையாகவும் உடுவெடுத்துள்ளது. மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான திக்விஜய சிங், டைனிக் பாஸ்கரின், போபால் வளாகம் உட்பட அரை டஜன் இடங்களில் சோதனைகள் நடந்து வருவதாக ட்வீட் செய்துள்ளார். இது ஒரு பழிவாங்கும் செயல் என்றும் பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத் மாடலுக்கு இதுதான் உதாரணம் என்றும் திக் விஜய் கூறியுள்ளார். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், ஊடக நிறுவனங்கள் மீதான சோதனைகள கண்டித்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களில், டைனிக் பாஸ்கரின் பதிப்புகள் கொரோனா நோய் பாதிப்பு பற்றிய செய்திகளை அதிகமாக வெளியிட்டது. இரண்டாவது அலை ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றி அதிக அளவில் செய்திகள் வெளியிட்டது.
மேலும் அண்மையில் இஸ்ரேலிய உளவு ஸ்பைவேர் கருவியால் நாட்டில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப்பட்ட செய்தியை ஆங்கில ஊடகங்களுக்கு நிகராக இந்திமொழியில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது டைனிக் பாஸ்கர். முதல் பக்க செய்தியாக பெகாசஸ் விவகாரத்தை வெளியிட்டது டைனிக் பாஸ்கர்.
இதுபற்றி காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் அர்ச்சனா சர்மா, “கடந்த சில நாட்களாக டைனிக் பாஸ்கர் செய்தித் தாளின் முதல் பக்க செய்திகளைப் பாருங்கள். பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் பற்றி கடுமையான கேள்விக் கணைகளைத் தொடுத்திருந்தார்கள். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இரண்டாம் அலையில் ஏற்பட்ட இறப்புகள் பற்றி உண்மை கண்டறியும் செய்திகளை வெளியிட்டார்கள். அப்புறம் என்ன, இன்று வருமான வரி சோதனையை எதிர்கொண்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வருமான வரித்துறையினர் சொல்லும் வரி ஏய்ப்பு காரணம் உள்ளபடியே இருந்தாலும் கூட இந்த ரெய்டு மேற்கொள்ளப்பட்டிருக்கும் சூழல் எதிர்க்கட்சியினரின் புகார்களை வலுப்படுத்துவதாக உள்ளது.
**-வேந்தன்**
�,”