‘சட்டப்படி நடவடிக்கை’ திருப்பியடித்த திரிஷா… மன்னிப்பு கேட்ட மாஜி அதிமுக நிர்வாகி!

Published On:

| By Manjula

actress trisha admk av raju

தன்மீது அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, நடிகை திரிஷா தெரிவித்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கும் திரிஷா குறித்து, சமூக வலைதளங்களில் முன்னாள் சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஏ.வி. ராஜு  பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த விவகாரத்தில் திரிஷாவிற்கு திரை பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஃபெப்சி உள்ளிட்ட அமைப்புகளும் ஏ.வி.ராஜுவிற்கு எதிராக அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து இயக்குநரும், நடிகருமான சேரன்,”வன்மையாக கண்டிக்கிறேன். எந்த ஆதாரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்,” என தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்து உள்ளார்.

லியோ படவிழாவில் சர்ச்சையாக பேசி திரிஷாவால் காவல் நிலையம் வரை சென்ற நடிகர் மன்சூர் அலிகான் இதுகுறித்து,

”போகிற போக்கில் நடிகைகள் குறித்து கேவலமாக பேசியிருப்பது தனது மனதை நோகச் செய்கிறது. சமூகத்தை பாதிக்கும் ஆபத்தான செயல்”, என ஆடியோ வெளியிட்டு திரிஷாவிற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை திரிஷா தன்மீது அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எனப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, “கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்ப பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது.

இத்தகைய நபர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”, என தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். தற்போது திரிஷாவின் இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த ரசிகர்கள், ”உங்களிடம் இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம்,” என அவருக்கு தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இதற்கிடையில் ஏ.வி.ராஜு தன்னுடைய சமீபத்திய பேட்டியில் இயக்குநர் சேரன், நடிகர் விஷால் மற்றும் திரைத்துறையினரிடம் மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார்.

நடிகை திரிஷா பற்றி பேசும் அளவுக்கு தான் தகுதியானவன் அல்ல என்றும், தன்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

திரிஷா சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த நிலையில், ஏ.வி.ராஜு மன்னிப்பு கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரசிகர்கள் ‘கொண்டாடிய’ நடிகைகளின்… உண்மையான ‘பெயர்’ இதுதான்!

சண்டிகர் மேயர் தேர்தல் – பாஜக வெற்றி செல்லாது : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share