சென்னை கமலாலயத்தில் நடிகை கஸ்தூரியும், Namis South Queen India நிறுவனத்தின் தலைவருமான திருநங்கை நமிதா மாரிமுத்துவும் பாஜகவில் இணைந்தனர்.
நடிகை கஸ்தூரி கடந்த 1991ம் ஆண்டு இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கத்தின் வெளியான ‘ஆத்தா உன் கோவிலிலே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். பல்வேறு நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
கஸ்தூரி, சமூக பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது கருத்துகளை முன் வைத்து வந்தார். எந்த அரசியல் கட்சிகளையும் சாராமல், சமூக வலைதளங்களின் மூலம் மக்களை பாதிக்கும் நடப்பு நிகழ்வுகளுக்கு ஏற்ப கருத்து தெரிவித்து வந்தார்.
கடந்த ஆண்டு தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் எழும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பின்னர் தலைமறைவாக இருந்தவரை கைது செய்தனர்.
மன்னர்களுக்கு அந்தப்புர சேவைகள் செய்ய வந்தவர்கள் தெலுங்கர்கள் என்றும், தமிழர்களான பிராமணர்களை, தமிழர்கள் இல்லை என அவர்களால் எப்படிச் சொல்ல முடியும் என கேள்வி எழுப்பியதாக சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சை எழுந்தது.
தெலுங்கா்களை அவமரியாதையாக பேசிய நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன்மேம்பாட்டுப் பிரிவுத் தலைவா் அமா்பிரசாத் ரெட்டி வலியுறுத்தியிருந்தார்.
இந்தசூழலில் பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் நடைபெற்ற விழாவில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடிகை கஸ்தூரி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
