தனக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவதாகவும், ஹோட்டலில் தனிமையில் சந்திக்க அழைப்பதாவும் பிரபல மலையாள நடிகை காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது குற்றம் சாட்டிய சம்பவம் கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.
முன்னாள் பத்திரிகையாளரும், மலையாள நடிகையுமான ரினி அன் ஜார்ஜ், பிரபல அரசியல் கட்சி தலைவர் ஒருவர் தனக்கு ஆபாசமாகவும், எல்லை மீறி மெசேஜ் செய்ததாகவும் குற்றம் சாட்டினார். மேலும் ஹோட்டலுக்கு தன்னை தனியாக அழைப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவரது கட்சி தலைவர்களிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டிய போது கூட அவர் அலட்சியமாக நடந்து கொண்டதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கட்சியின் பிரபல தலைவர்களின் மனைவிகள் மற்றும் மகள்களுக்கும் பாலியல் ரீதியான தொல்லை கொடுப்பதாகவும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் அவர் குற்றம் சாட்டப்பட்டவர் யார் என்பது குறித்து வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில் எழுத்தாளர் ஹனி பாஸ்கரன் காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூடத்திற்கு எதிராக புகார் அளித்தார். பல பெண்கள் புகார் அளித்தும் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் பாலக்காட்டில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏவும், மாநில இளைஞரணி காங்கிரஸ் தலைவருமான ராகுல் மம்கூடத்தின் அலுவலகத்தை நோக்கி பாஜக பேரணி நடத்தியது. அவர் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து அவர் இளைஞரணி மாநில தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
மலையாள திரையுலகைச் சேர்ந்தவர்கள் மீது கேரள நடிகைகள் தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து வரும் நிலையில், தற்போது காங்கிரஸ் எம்எல்ஏ மீதே பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
