படப்பிடிப்புக்கு வர மறுக்கும் நடிகர்கள்.. தலைகீழான திரையுலகம்!

Published On:

| By Balaji

கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் வேகம் கொண்டிருக்கிறது. இந்த இரண்டாம் அலை காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டு வருவதுபோல தமிழ் திரையுலகமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் துவங்கிய முதலிலிருந்தே திரையரங்குகள் இன்றுவரையிலும் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. நடுவே, தளர்வுகளின் போது விஜய் நடிக்க மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன், கார்த்தி நடிக்க சுல்தான் மற்றும் தனுஷ் நடிக்க கர்ணன் மாதிரியான படங்கள் வெளியாகி கொஞ்சம் நம்பிக்கையூட்டியது. தற்பொழுது, மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் திரையரங்க உரிமையாளர்களில் துவங்கி தியேட்டர் ஆபரேட்டர்கள் வரைக்குமான அனைவரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

ADVERTISEMENT

திரைப்படங்களின் படப்பிடிப்புகளுக்கு அனுமதி இருக்கிறது. இருப்பினும், பல பெரிய நட்சத்திர படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘சூர்யா 40’ , சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ‘டான்’ மற்றும் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் ‘கோப்ரா’ உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. என்ன காரணமென்று விசாரித்தால், கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக பரவி வருவதால் படப்பிடிப்புக்கு வர நடிகர்கள் தயக்கம் காட்டுகிறார்களாம். கறாராக படப்பிடிப்புக்கு வர முடியாது என்று சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

அதுபோல, தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துவருகிறார் சமந்தா. அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. ஆனால், சமந்தா கலந்துகொள்ளவில்லை. என்ன வென்று கேட்டால், கொரோனா அச்சுறுத்தலை காரணமாகக் கூறி சமந்தா படப்பிடிப்புக்கு வரவில்லை என்று சொல்கிறார்கள். மற்றுமொரு புதிய தகவலும் கிடைத்தது. பொதுவாக, ஒரு படத்துக்கு பைனான்ஸியரிடம் பணத்தைப் பெற்றே தயாரிப்பாளர்கள் படத்தை தயாரிப்பார்கள். இந்த கொரோனாவினால் எப்போது திரையரங்கம் திறக்கும் என்பதும் தெரியவில்லை. படப்பிடிப்புக்கு தடை போடவும் வாய்ப்பு இருப்பதால் தயாரிப்பாளருக்கு பணம் கொடுக்க பைனான்ஸியர்களும் முன்வருவதில்லையாம். கொரோனா பிரச்னை முடியட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிடுவதாகச் சொல்லப்படுகிறது. அதனாலும், பணம் இல்லாமல் படப்பிடிப்புகள் பலவும் தடைபட்டுநிற்கின்றது.

ADVERTISEMENT

இது ஒருபக்கம் மென்றால், எந்த சிக்கலுமின்றி ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ரஜினி நடிக்க அண்ணாத்த படப்பிடிப்பு தீவிரமாக நடந்துவருகிறது. இதுதான், இப்போதைய தமிழ் திரையுலக நிலவரம்.

**- தீரன் **

ADVERTISEMENT

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share