சாதித்த மாணவர்களிடம் அன்பு பரிசு கேட்ட நடிகர் விஜய்

Published On:

| By christopher

உங்கள் வீட்டருகே தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களிடம் எப்படி படிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து அவர்களை தேர்ச்சி பெற வைப்பதுவே நீங்கள் எனக்கு கொடுக்கும் பரிசு என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

மேல்நிலை கல்வி இரண்டாம் ஆண்டு பொது தேர்வில் மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர், மாணவிகளுக்கு தனது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பாராட்டு சான்றிதழும், ரொக்கப் பரிசையும் நடிகர் விஜய் வழங்கிய 
 விழா இன்று (ஜூன் 17) காலை கிழக்குக் கடற்கரை சாலையில் இருக்கும் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த விழாவில் நடிகர் விஜய் பேசுகையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா நண்பிகளே!!!  இங்கு இருக்கும் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களுக்கு எனது வாழ்த்துக்கள். நீங்கள் வெற்றி பெற கடுமையாக உழைத்த உங்களது ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

actor vijay request 10 12 students for gift

இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்த மக்கள் இயக்க நண்பர்களுக்கும், அதன் தலைவர் ஆனந்த் அண்ணனுக்கும் நன்றிகள்.

ADVERTISEMENT

தற்போது ஃப்ரீயாக கிடைப்பது அட்வைஸ் மட்டும்தான். அதனை உங்களுக்கு நான் கூற விருப்பப்படுகிறேன்.

உங்களை பார்க்கும்போது எனது பள்ளி நினைவுகள் எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. நான் படிக்கும்போது ரொம்ப சுமார்தான்.

ADVERTISEMENT
actor vijay request 10 12 students for gift

நான் ஒரு திரைப்படத்தைப் பார்த்தேன். அந்த வசனம் என்னை மிகவும் ஈர்த்து விட்டது. “நம்மிடம் காடு இருந்தால் எடுத்துக் கொள்வார்கள். பணம் இருந்தால் பிடுங்கி கொள்வார்கள். ஆனால் படிப்பை மட்டும் அவர்களால் எடுக்க முடியாது.” என்று!

முழுமையான கல்வி என்பது ஐன்ஸ்டீன் சொன்னதுபோல “நாம் படித்த படிப்பு எல்லாம் மறந்த பிறகு நாம் நினைவில் எது இருக்கிறதோ… அதுதான் நாம் படித்த கல்வி” என்றார் ஐன்ஸ்டீன். இதுவே சில காலம் கழித்துதான் எனக்கே புரிந்தது.

உங்களது கல்வி என்பது உங்களது பண்பு மற்றும் சிந்திக்கும் திறனை சார்ந்தது. நீங்கள் பணத்தை இழந்திருந்தால் எதையும் நீங்கள் இழக்கவில்லை என்றுதான் அர்த்தம். உடல் நலம் இழந்தால் ஏதோ ஒன்றை இழந்து உள்ளீர்கள் என்று அர்த்தம். ஆனால், உங்களுடைய குணத்தை இழந்தால் அனைத்தையும் இழந்து விட்டீர்கள் என்றே அர்த்தம்.

actor vijay request 10 12 students for gift

தற்போது 12-வது முடித்து அடுத்து கல்லூரி படிப்பை தொடர உள்ளீர்கள். இப்போது ஹாஸ்டல், கல்லூரி, புது புது நண்பர்கள் என உங்களுக்கு சுதந்திரம் கிடைக்கும். அதனை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பண்பை, குணத்தை இழந்து விடாதீர்கள். வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள். அதேபோல் நமது வாழ்க்கை நம் கையில்தான் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

தற்போது சமூக வலைதளத்தில் போலி செய்திகள்தான் அதிகமாக வருகின்றன. அப்படி போலி செய்திகளை பரப்புபவர்களுக்கு ஒரே ஒரு குறிக்கோள்தான். அந்த செய்தி கவர்ச்சிகரமாக இருந்தாலே போதும் என்பதுதான். அதில் எதை எடுக்க வேண்டுமா, எதனை நம்ப வேண்டும் என முடிவு செய்ய வேண்டியது நீங்கள்தான்.

நான் சமீப காலமாகத்தான் புத்தகங்களை படிக்க ஆரம்பித்துள்ளேன். தற்போது புத்தகம் வாசிக்கும் பழக்கம் எனக்கு பிடித்துள்ளது. நீங்களும் அதேபோல் கல்வியை தாண்டி மற்ற தலைவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். காமராஜரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அம்பேத்கரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பெரியாரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

முன்பு ஒரு பழமொழி உண்டு. “உங்கள் நண்பனை பற்றி சொல்; உன்னை பற்றி சொல்கிறேன்” என்று! ஆனால் தற்போது “நீங்கள் எந்த சமூக வலைதள பக்கத்தை பின்பற்றுகிறீர்கள் என்பதை சொல்லுங்கள் பற்றி நான் சொல்கிறேன்..” என்றாக மாறிவிட்டது.

நாளைய இளம் வாக்காளர்களே, நீங்கள் வாக்களிக்க இன்னும் இரண்டு, மூன்று வருடங்கள்தான் இருக்கிறது. நீங்கள் வாக்களிப்பீர்கள். அப்போது நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். நமது கையை வைத்து நம் கண்ணையே குத்தும் நிலைதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதாவது காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவதைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.

ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஒரு தொகுதிக்கு சுமார் 15 கோடி ரூபாய் செலவாகும். அப்படி என்றால் அந்த 15 கோடியை அவர்கள் முன்னாடியே சம்பாதித்து இருப்பார்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். “இனி காசு வாங்கி ஓட்டு போட வேண்டாம்..” என்று உங்கள் அம்மா, அப்பாவிடம் சொல்லுங்கள்.

உங்கள் வீட்டருகே உங்கள் பகுதியில் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு நீங்கள் எப்படி தேர்ச்சி பெற்றீர்கள்.. எப்படி படிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து அவர்களை தேர்ச்சி பெற வைத்தால் அதுவே நீங்கள் எனக்கு கொடுக்கும் பரிசு.

அதேபோல் நீங்கள் எவ்வளவு உயர்ந்தாலும் உங்களை மட்டம் தட்ட ஒரு குரூப் இங்கே இருக்கும். அவர்களை கண்டு கொள்ளாதீர்கள். உங்கள் மனம் சொல்வதை கேளுங்கள். வாழ்க்கையில் முன்னேறுங்கள்..” என்று பேசி முடித்தார் நடிகர் விஜய்.

இராமானுஜம்

அமைச்சர் – எம்.பி மோதல்: கீழே தள்ளிவிடப்பட்ட கலெக்டர்

டிஜிட்டல் திண்ணை: டார்கெட் உதயநிதி… திணறும் ED: விசாரணையில் குதிக்கும் இன்னொரு ஏஜென்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share