சுற்றிச் சுழன்ற சர்ச்சைகளுக்கு நடுவே, அரசியல் பேசிய விஜய் படங்கள்!
நடிகர் விஜய் இனி நாடறிந்த அரசியல் தலைவர் ஆகப் போகிறாரா? தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சிப் பெயரை அறிவித்த நாள் முதலே, இந்த கேள்வி அவரைத் துரத்துகிறது.
ரசிகர் நற்பணி மன்றங்களை ‘விஜய் மக்கள் இயக்கமாக’ மாற்றியது முதல் கட்சியைப் பதிவு செய்து, கொடியை அறிமுகப்படுத்தியது என்றிருந்த விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் தற்போது அடுத்த கட்டத்தை அடைந்திருக்கிறது.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் பலர்.
கலைஞர், எம்ஜிஆர், எஸ் எஸ் ஆர், ஜெயலலிதா, சிவாஜி, பாக்யராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த், கமல்ஹாசன் முதல் என்.டி.ஆர்., அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, பவன் கல்யாண் என்று நீள்கிறது அந்த பட்டியல். அவர்களில் ஒரு சிலரே தலைவர்களாக உயர்ந்திருக்கின்றனர்.
அந்த வரிசையில் இடம்பெற முயற்சிக்கும் விஜய், தான் நடித்த படங்களில் அரசியல் பேசியிருக்கிறாரா?
இக்கேள்விகளுக்கான பதிலை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இருந்து தான் தொடங்க வேண்டும்.
விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படத்தின் பெயர் ‘வெற்றி’. அவர் நாயனாக நடித்த முதல் படம் ‘நாளைய தீர்ப்பு’.
பூவே உனக்காக படம் வழியே நட்சத்திரமாக மாறியபிறகு, மகன் விஜய்க்காகவே எஸ்.ஏ.சி உருவாக்கிய படம் ‘மாண்புமிகு மாணவன்’. விஜயகாந்த் போல விஜய்யையும் ஒரு ஆக்ஷன் நாயகனாக அவர் ஆக்க விரும்பினார். அவர் இயக்கிய படங்களே அதனைச் சொல்லும்.
காதலுக்கு மரியாதை, லவ் டுடே, நினைத்தேன் வந்தாய், நிலாவே வா, துள்ளாத மனமும் துள்ளும் என்று காதல் நாயகனாக திரிந்த விஜய்யை எதிரிகளுக்கு சவால் விட வைத்த படம் ‘குஷி’. ‘என்னை மட்டுமில்ல, என் இமேஜை கூட உன்னால ஒண்ணும் பண்ண முடியாது’ என்று ‘பஞ்ச்’ பேச வைத்தது அப்படம்.
அதனைத் தொடர்ந்து விஜய் பேசிய பல ‘பஞ்ச்’ வசனங்கள் சக போட்டியாளரான அஜித்தை விமர்சிப்பதாகவே சொல்லப்பட்டது. ஆனால், இன்று அவரது அரசியல் வருகையோடு அவை பொருந்துவது ஆச்சர்யம் தான்.
எஸ்.ஏ.சி இயக்கிய படங்கள் தவிர்த்து, விஜய் படங்களில் நாட்டுநடப்பையோ, அரசியல்வாதிகளையோ விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெறவில்லை.
மஜீத் இயக்கத்தில் வெளியான ‘தமிழன்’, அந்த எண்ணத்தை தகர்த்தது. மறைந்த இயக்குனர் திருப்பதிசாமி இயக்கத்தில் விஜய் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகி, பின்னர் உருவாக்கப்பட்ட படம் அது. அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் கடமை மீறல்கள் குறித்து அப்படம் பேசியது.
’அன்றாடத் தேவைக்காக மக்கள் மார்க்கெட்டுக்கு போயிட்டு வர்ற மாதிரி, உரிமைகளுக்காக நீதிமன்றம் தேடி வர்ற காலம் வரணும்’ என்று தொடங்கி மிக நீளமான ‘பஞ்ச்’ வசனம் பேசியிருந்தார் விஜய். அன்று முதல் விஜய்யை சுற்றி அரசியல் சர்ச்சைகள் சுழலத் தொடங்கின.
பாட்ஷா ரஜினி பாணியில் விஜய் ஆக்ஷன் ஹீரோவாக நடித்த படம் ‘பகவதி’. ‘எதிரிய வாழவிட்டு அவன் முன்னாடி வாழ்ந்து காட்டுறதுதான் எனக்கு பிடிக்கும்’ என்ற ’பஞ்ச்’ அதில் இடம்பெற்றிருந்தது.
’புதிய கீதை’யில் தனது ரசிகர்களுக்கு ‘ஊக்கப் பேச்சை’ தந்த விஜய், ‘எவ்வளவு உயரத்துக்கு போனாலும் நான் நானாவே இருப்பேன்’ என்று உறுதி தந்தார்.
விஜயகாந்தை தனது ஆதர்சமாக அதுநாள்வரை திரையில் முன்வைத்த விஜய், அந்த படத்தில் ரஜினியின் தம்பியாக தன்னை அடையாளப்படுத்தினார். அப்போதே, ‘தளபதி’ என்று தன்னை முன்னிலைப்படுத்தியிருந்தார்.
அந்த காலகட்டத்தில் விஜய் நடித்த வசீகரா, திருமலை, கில்லி, மதுர, திருப்பாச்சி எனப் பல படங்கள் சர்ச்சைகளில் சிக்கின. அதற்குக் காரணம், விஜய் பேசிய பஞ்ச் வசனங்கள் தான்.
திருமலையில் ‘முடிவு பண்ணி இறங்கிட்டேன். பீல் பண்ண மாட்டேன், பேக் அடிக்க மாட்டேன். ஒன்ஸ் பிக்கப் ஆனா ஆனதுதான்.. போய்க்கிட்டே இருப்பேன்’ என்று வசனம் பேசியிருப்பார் விஜய்.
கில்லியில் ‘இந்த ஏரியா அந்த ஏரியா அந்த இடம் இந்த இடம் எங்கயுமே எனக்கு பயம் கிடையாதுடா. ஏன்னா ஆல் ஏரியாவுலயும் அய்யா கில்லிடா..’ என்றிருப்பார்.
‘எதிர்ப்பு எங்க இருக்குதோ, அங்க சிக்சர் அடிச்சுட்டு செண்டர்ல சேரை போட்டு உட்கார்றதுதான் நம்ம பழக்கமே’ என்று ’ஆதி’யில் பேசியிருப்பார் விஜய்.
போக்கிரியில் ‘நான் ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ என்று அவர் பஞ்ச்’ பேசியது இன்றும் ரசிகர்கள் காதில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என்று தான் நடித்த படங்களில் வில்லன்களை பந்தாடியதோடு, பஞ்ச் வசனங்களை மூச்சுவிடாமல் பேசியிருந்தார் விஜய்.
’காவலன்’ படத்தின் வெளியீட்டில் சில பிரச்சனைகள் ஏற்பட, முதன்முறையாகத் தனது படங்களுக்கு நேரும் சிக்கல்களைப் பொதுவெளியில் பேசத் தொடங்கினார் விஜய்.
வேலாயுதம், நண்பன், துப்பாக்கி, தலைவா என்று ஒவ்வொரு படத்திலும் அது உச்சம் பெற்றது. ’துப்பாக்கி’ படத்தில் ‘ஐ ஆம் வெயிட்டிங்’ என்று விஜய் வசனம் பேசியிருந்தார். அப்படத்தின் உள்ளடக்கத்திற்கு எதிரான புகார்களும் போராட்டங்களும் பிறகு செய்திகளாகின.
‘தலைவா’ படத்தின் கீழே இடம்பெற்ற ‘டைம் டூ லீடு’ எனும் டேக்லைன், அந்த படத்தின் வெளியீட்டையே தள்ளிப்போக வைத்தது. அருகாமை மாநிலங்களில் வெளியாகிச் சில நாட்கள் கழித்தே தமிழகத்தில் அப்படத்தை ரசிகர்கள் காணச் செய்தது.
’கத்தி’யில் ‘நம்ம பசி தீர்ந்ததுக்கு அப்புறம் சாப்பிடுற அடுத்த இட்லி இன்னொருத்தங்களோடது’ என்று கம்யூனிசம் பேசியிருந்தார் விஜய்.
கார்பரேட் நிறுவனங்கள் நிலத்தடி நீரைச் சூறையாடுவதாகப் பொங்கினார். விவசாயிகள் நகரங்களில் சின்னச் சின்ன வேலைகள் செய்து பிழைப்பதாகச் சொன்னார். உணர்வெழுச்சியூட்டிய அவ்வசனங்களுக்கு கைதட்டி மகிழ்ந்தார்கள் ரசிகர்கள்.
’தெரிஞ்ச எதிரிய விட தெரியாத எதிரிக்குதான் அள்ளு அதிகமா இருக்கணும்’, ‘இன்னிக்கு நிறைய பேர்கிட்ட இல்லாத கெட்ட பழக்கம் ஒண்ணு என்கிட்ட இருக்குது.. சொன்ன வாக்கை காப்பாத்தறது’ என்று பஞ்ச் வசனங்களால் ரசிகர்களைத் திணறடித்தது ‘பைரவா’.
‘7 சதவீத ஜிஎஸ்டி வாங்குற சிங்கப்பூர் மக்களுக்கு மருத்துவத்தை இலவசமா தர்றப்போ 28 சதவீத ஜிஎஸ்டி வாங்குற நம்ம அரசாங்கத்தால ஏன் மருத்துவத்தை இலவசமா தர முடியலை’ என்று மத்திய, மாநில அரசுகளை விமர்சனம் செய்தது ‘மெர்சல்’. தனியார் மருத்துவமனைகளின் அட்ராசிட்டியைப் பேசியது.
அது மட்டுமல்ல, ‘தலைவன்றது வெறும் வார்த்தையில்ல, ஒரு தலைமுறையோட மொத்த நம்பிக்கை’ என்று அரசியல் பேசியது.
‘சர்கார்’ படத்தில் நேரடியாக அரசியல் களத்தில் குதிக்கும் கார்பரேட் நிறுவன முதலாளியாக நடித்திருந்தார் விஜய். ’பிராண்ட அழிக்கறதுலதாண்டா நான் ஸ்பெஷலிஸ்டே’ என்று ‘பஞ்ச்’ பேசியிருந்தார்.
’கப் முக்கியம் பிகிலு’ என்றது ‘பிகில்’. ‘என்னை பிடிச்சவன் கோடி பேர் இருக்காண்டா வெளியில’ என்றது மாஸ்டர்.
இப்படி விஜய் பேசிய பல சினிமா பட வசனங்கள், தியேட்டரில் ரசிகர்களை அன்று ‘கூஸ்பம்ஸ்’ ஆக்கின. இன்றோ, அவை ரசிகர்களை ஊக்கப்படுத்தும் உற்சாக வார்த்தைகளாக மாறியிருக்கின்றன.
மேற்சொன்ன வசனங்களில், அரசியல்ரீதியிலான எதிர்ப்புகளை எதிர்பார்த்து விஜய் பேசிய ‘பஞ்ச்’ வசனங்கள் அதிகமிருக்காது. ஆனால், இனி அவரது ஒவ்வொரு அசைவும் மூச்சும் ‘பஞ்ச்’ வசனங்களை விட நுட்பமாகக் கவனிக்கப்படும்.
விஜய் படங்கள் பேசிய அரசியல், அவரது வசனங்கள் உண்டாக்கிய அதிர்வுகள், அவரது கட்சி செயல்பாடுகளில் எந்தளவுக்கு எதிரொலிக்கும் என்பதை எதிர்காலம் நமக்குச் சொல்லும்..!
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: ஆரி வொர்க் பிளவுஸ்… கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!
வேலைவாய்ப்பு : என்.எல்.சி. நிறுவனத்தில் பணி!
கல்விக்காக குழந்தைகளை கனடாவுக்கு அனுப்ப வேண்டாம்: என்ன காரணம்?
டாப் 10 செய்திகள்: விஜய் கட்சியின் மாநாடு முதல் தேர்தல் களத்தில் தோனி வரை!
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: உங்கள் வீட்டில் ‘ஹேப்பி குக்கிங்’ அமைய இதை ஃபாலோ பண்ணுங்க!