நடிகர் உதயா தற்காலிகமாக நடிகர் சங்கத்தில் நீக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
கடந்த நடிகர் சங்க தேர்தலின் போது பொது செயலாளர் விஷால் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை வைரஸ் என்று கூறினார். ஒரு பொது செயலாளர் இப்படி பேசலாமா?. விஜய் காந்த் கடனை அடைத்துதான் நடிகர் சங்கத்தை நடத்தினார்.ஆனால் இவர்கள் கடன் வாங்கி கட்டடம் கட்டுகிறார்கள்.
நான் நடிகர் சங்கம் கடன் வாங்காமல் இருக்க வேண்டுமென்று பதிவு வெளியிட்டேன். அதற்காக, என்னை ஆறு மாதம் தற்காலிக நீக்கம் செய்தனர்.இந்த தற்காலிக நீக்கம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் தொடர்ந்து கொண்டே சென்றது.
இந்நிலையில், எனக்கு ஒரு கடிதம் வந்தது.அந்த கடிதத்தில் என்னை நிரந்தர நீக்கம் செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. நான் என்னுடைய உறுப்பினர் உரிமைக்காக நீதி மன்றத்தில் வழக்கு போட்டிருந்தேன். அதற்காக என்னை நிரந்தரமாக நீக்குவதா? நான் தேர்தலில் போட்டியிடுவேன் என்ற பயத்தில்தான் இப்படி செய்கின்றனர்.
எனக்கு உறுப்பினர் உரிமை தேவை இல்லை. ஆனால் இவர்கள் செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் செய்வதை பார்க்கும் போது சரத்குமார், ராதா ரவியே பரவாயில்லை என்றே தோன்றுகிறது.
நடிகர் நாசர் தலைவராக உள்ளார் . ஆனால் அவராலேயே பேச முடியவில்லை. சங்கமே செயல் படாமல் உள்ளது என தெரிவித்துள்ளார்.
நடிகர் உதயா இயக்குநர் ஏ.எல். விஜய்யின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்